துணிவு படம் போல வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி… சாமர்த்தியமாக திட்டத்தை முறியடித்த பெண் காவலர்கள் : வைரலாகும் வீடியோ…!

Author: Babu Lakshmanan
20 January 2023, 5:07 pm
Quick Share

பீகார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை இரண்டு பெண் காவலர்கள் விரட்டி அடித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஹாஜிபூர் மாவட்டம் செந்துவாரி சௌக் பகுதியில் உத்தர பீகார் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சாந்தி குமாரி, ஜூஹி குமாரி ஆகிய இரு பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, காலை 11 மணி அளவில் இருசக்கர வாகனங்களில் வந்த 3 பேர் முகமூடி அணிந்து வங்கிக்குள் நுழைந்தனர். இதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட இருபெண் காவலர்களும், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வங்கி பாஸ்புக்கைக் காட்டுமாறு கேட்டனர்.

உடனே அவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டி மிரட்டினர். இந்த மிரட்டலுக்கு அஞ்சாத பெண் காவலர்கள், தங்கள் கையில் இருந்த துப்பாக்கிகளை காட்டி அவர்களை மிரளச் செய்தனர். அதிலும், உஷாரான ஜூஹி தனது துப்பாக்கியைச் சுடுவதற்கு ஆயத்தப்படுத்தினார்.

இதனால் பயந்து போன அந்த கும்பல் பைக்குகளைக்கூட எடுக்காமல், அலறி அடித்துக்கொண்டு தப்பியோடினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொள்ளையர்களை விரட்டியடித்த பெண் காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், உயரதிகாரி அவர்களை அழைத்து பாராட்டினார்.

Views: - 345

0

0