பத்மஸ்ரீ விருதை சாலையில் எறிந்த மல்யுத்த வீரர்… பூதாகரமாகும் மல்யுத்த சங்கத் தலைவர் எதிர்ப்பு விவகாரம்.. பிரியங்கா காந்தி நேரில் சந்திப்பு

Author: Babu Lakshmanan
22 December 2023, 10:01 pm
Quick Share

மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கும், வீரர் பஜ்ரங் பூனியாவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்தித்து பேசினர்.

பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்று தலைவராக தேர்வானார்.

இதற்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால், பல்வேறு தரப்பினர் பாஜகவை கடுமையாக விமர்சித்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்கப் போவதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அறிவித்தார். மேலும், டெல்லியில் பிரதமரை சந்தித்து விருதை திருப்பிக் கொடுக்க சென்ற அவர், சாலையில் அதனை வைத்து விட்டு, இந்த விருதை பிரதமரிடம் கொடுக்குமாறு கூறினார்.

இந்நிலையில், சாக்ஷி மாலிக்கும் பஜ்ரங் பூனியாவும் இணைந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, “நான் ஒரு பெண்ணாக அவருக்கு ஆறுதல் கூற வந்தேன்,” எனக் கூறினார்.

Views: - 274

0

0