உயிர் பலி வாங்கிய துர்கா பூஜை.. ஆரத்தி எடுத்த போது பந்தலில் பரவிய தீ : இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி… 52 பேர் படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2022, 8:55 am
Durga Pooja Fire - Updatenews360
Quick Share

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை பந்தலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் காயமடைந்தனர். இரவு 9.30 மணியளவில் ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தின் போது பந்தலுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இருந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு சென்று தீயை அணைத்தனர்.

மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்ட கலெக்டர், பிற மூத்த அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். இந்த தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்த 33 பேர் அருகிலுள்ள வாரணாசியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், காயமடைந்த பலர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள், மற்றும் 45 வயதான ஒரு பெண் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மாவட்ட கலெக்டர் இன்று தெரிவித்தார்.

துர்கா பூஜையில் சாமி தரிசனம் செய்ய சென்ற இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Views: - 427

0

0