இன்னும் 14 நாட்களில் கொரோனா அலை உச்சத்தை தொடும்: ஆனாலும் ஒரு குட்நியூஸ் இருக்கு…சென்னை ஐஐடி கணிப்பு…!!

Author: Rajesh
24 January 2022, 9:04 am
Quick Share

புதுடெல்லி: கொரோனா தொற்றின் 3வது அலை 14 நாட்களில் உச்சம் அடையும் என சென்னை ஐ.ஐ.டி. கணித்துள்ளது.

நாட்டில் ஒமைக்ரான் வைரசால், கொரோனா தொற்றின் 3வது அலை தூண்டப்பட்டுள்ளது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த தொற்று எப்போது உச்சம் அடையும் என்பது தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி. கணித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. கணிதவியல் துறையும், கம்ப்யூட்டடேஷனல் கணிதம் மற்றும் தரவு அறிவியல் சிறப்பு மையமும் கணக்கீட்டு மாடல் மூலம், கொரோனா பற்றி பகுப்பாய்வு செய்துள்ளன. அதில், தற்போது ‘ஆர் வேல்யூ’ என்று சொல்லப்படுகிற கொரோனா பரவல் விகிதமானது, 1.57 சதவீதமாக உள்ளது. இது ஜனவரி 14 மற்றும் ஜனவரி 21 இடையேயான நிலவரம் ஆகும்.

இதுவே கடந்த 7ம் தேதிக்கும் 13ம் தேதிக்கும் இடையே 2.2 ஆக இருந்தது. அதற்கு முன்பாக டிசம்பர் 25ம் தேதிக்கும் 31ம் தேதிக்கும் இடையே இது 2.9 சதவீதமாக இருந்தது. ஆக, ஒரு கொரோனா நோயாளி 2.9 பேருக்கு தொற்றைப் பரப்புகிற நிலை, தற்போது 1.57 பேருக்கு பரப்புகிற நிலையாக குறைந்துள்ளது.

மும்பையில் இது 0.67, டெல்லியில் 0.98 என இருக்கிறது. ஆனால் சென்னையில் இது 1.2 ஆக உள்ளது. இதுவே கொல்கத்தாவில் 0.56 ஆக இருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டி. கணக்கீட்டின்படி, கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாளில் உச்சம் அடையும் என அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பிப்ரவரி 1-15 தேதிகளுக்கு இடையே கொரோனா 3வது அலை உச்சம் அடையும் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 2247

0

0