108 அடி உயர கம்பத்தில் அனுமன் கொடியை அகற்றிய அதிகாரிகள்… பொதுமக்கள் கடும் எதிர்ப்பு… கர்நாடகாவில் 144 தடை உத்தரவு

Author: Babu Lakshmanan
29 January 2024, 2:17 pm
Quick Share

கர்நாடகாவில் ஹனுமன் கொடியை அகற்றியதால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக – மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் 108 உயரத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டு, அதில் அனுமன் கொடியை ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கொடிக்கம்பத்தை அமைக்க கிராமப் பஞ்சாயத்து அனுமதியை வழங்கியது.

ஆனால், தேசியக்கொடிக்கு பதிலாக அனுமன் கொடியை ஏற்றியதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அந்தக் கொடியை அகற்றுமாறு பஞ்சாயத்து நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, கொடியை அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் நேற்று சென்ற நிலையில், அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பாஜக, பஜ்ரங் தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்தனர்.

அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ரவி குமாரின் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பதற்றம் உருவாகிய நிலையில்,அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், தடியடி நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர். பின்னர், அனுமன் கொடியை அகற்றி விட்டு தேசியக்கொடியை ஏற்றினர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்வரும் நாட்களில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கர்நாடகாவில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Views: - 168

0

0