ஒன்றரை மாத சிறை வாசம்.. வெளியே வந்த கெஜ்ரிவால் ; தொண்டர்களை பார்த்ததும் சொன்ன அந்த வார்த்தை!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2024, 8:32 pm
Kejr
Quick Share

ஒன்றரை மாத சிறை வாசம்.. வெளியே வந்த கெஜ்ரிவால் ; தொண்டர்களை பார்த்ததும் சொன்ன அந்த வார்த்தை!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது.

தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி 10-ந்தேதி (இன்று) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் , டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறை : பெண்களை இழுத்து தள்ளிய கொடுமை.. தவிக்கும் 15 குடும்பங்கள்!

அடுத்த மாதம்(ஜூன்) 1ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2ஆம் தேதி சரணடைய வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் கெஜ்ரிவால் ஈடுபடலாம் என அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவுகள் உள்ள நிலையில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சராக எந்த அலுவல் பணிகளிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்தார். கெஜ்ரிவாலை வரவேற்க ஆம் ஆத்மி தொண்டர்கள் சிறைக்கு வெளியே திரண்டு இருந்தனர்.

அவர்களை பார்த்து உற்சாகத்துடன் கை அசைத்து சென்ற கெஜ்ரிவால், பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கெஜ்ரிவால் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி.

உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நான் தற்போது உங்கள் முன்னால் வந்துள்ளேன். நாளை காலை டெல்லியில் உள்ள ஹனுமன் கோயிலில் நான் வழிபாடு செய்ய உள்ளேன். எனக்கு எப்போதும் அனுமனின் ஆசி உள்ளது.

நாம் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட வேண்டும். இதுவே எனது கோரிக்கை.. சர்வாதிகாரத்திற்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும்” என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் வழிநெடுக வரவேற்பு தெரிவித்தனர். தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

Views: - 135

0

0