12ம் வகுப்பு மாணவியின் காதல் வலை… பறிபோன இரு உயிர்கள் ; ஆந்திராவை உலுக்கிய முக்கோணக் காதல் கதை…!!

Author: Babu Lakshmanan
17 August 2023, 5:05 pm
Quick Share

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தபாலம் நாகேந்திரா காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். ஆதர்ஷா நகரை சேர்ந்த சூர்ய பிரகாஷ் ராவ் என்பவரை காதலித்து வந்து உள்ளார். அதே போல், சூர்ய பிரகாஷின் நண்பரான லெங்கா சாய் குமாரையும் சிறுமி காதலித்து வந்து உள்ளார்.

ஒருவருக்கு தெரியாமல், இன்னொருவரை காதலித்து வந்த சிறுமி, தன்னை மட்டுமே உயிருக்குயிராக நேசிப்பதாக அந்த இரு இளைஞர்களும் நினைத்துக் கொண்டனர். சாய்குமாரும், சூரியபிரகாஷூம் நண்பர்கள் என்றாலும், மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை. இது மாணவிக்கு இன்னும் வசதியாகிவிட்டது. இதனால், அவர் 2 வாலிபர்களுடனும் உல்லாசமாக சுற்றித்திரிந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, மாணவி, சாய்குமார் இருவரும் அந்த பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கிய போது, சாய்குமார் லாட்ஜ் அறையில் வைத்தே மாணவிக்கு தாலி கட்டி ரகசிய திருமணம் செய்துள்ளார். இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வீடுகளில் அலைப்பாயுதே பட பாணியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், சாய்குமார், மாணவிக்கு தாலி கட்டிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்ய பிரகாஷ், தன்னுடைய காதலிக்கு நண்பன் சாய்குமார் தாலி கட்டியதைப் பற்றி, நேரடியாகவே அந்த மாணவியிடம் கேட்டுள்ளார்.

வீடியோ வந்துவிட்டதால், அந்த மாணவியும் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சூரியபிரகாஷ், நேராக சாய்குமாரிடம் சென்று, மாணவி தன்னையும் காதலித்து நடித்தது பற்றி புட்டு புட்டு வைத்தார். இதைக்கேட்டு, அதிர்ந்து போன சாய்குமார் அதிர்ந்து போனார்.

இதைத் தொடர்ந்து, சூரிய பிரகாஷ் மற்றும் சாய் குமாரும் மாணவியின் வீட்டுக்கு சென்று, முக்கோண காதல் விவகாரத்திற்கு, ஒரு முடிவை சொல்லுமாறும் கேட்டுள்ளனர். இப்படி 2 காதலர்களும் வீட்டுக்கு தனது முகத்திறையை கிழித்து விட்டதால், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், போலீஸ் விசாரணை வரை சென்றதால் எங்கே நாம் மாட்டிக் கொள்வோமோ என்று சூரியபிரகாஷ் பயந்துவிட்டார். மேலும், தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ? என்று நினைத்து, ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மைனர் பெண்ணுக்கு தாலி கட்டியதாக சாய்குமார் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 2 பேரை காதலிப்பதாக 12-ம் வகுப்பு மாணவி நடித்து மோசடி செய்ததன் விளைவு, 2 உயிர்கள் பறிபோனதுடன், இளைஞர் ஒருவர் வாழ்க்கை தொலைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த முக்கோணக் காதலால் 3 குடும்பங்கள் தத்தளிப்பதை உணர்ந்து, இளைஞர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

Views: - 314

0

0