ஒடிசா ரயில் விபத்து.. காயமே இல்லாமல் இறந்து போன ஒரே பெட்டியைச் சேர்ந்த 40 பேர் ; வெளியான புதிய அதிர்ச்சி தகவல்..!!

Author: Babu Lakshmanan
6 June 2023, 2:04 pm
Quick Share

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் உடலில் எந்தவித காயமும் இல்லாமல் இறந்து போன சம்பவம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜுன் 2ம் தேதி இரவு 7 மணியளவில் ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 275 பேர் உயிரிழந்தனர். முதலில் இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என தெரியாத நிலையில், பஹனகா ரெயில் நிலையம் அருகே மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லூப் லைனில் திடீரென சென்று சரக்கு ரெயில் மீது மோதியது தெரிய வந்தது.

இந்த விபத்தினால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்துள்ளன. அந்த சமயத்தில் வந்த பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரயில், தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 278 பேர் பலியாகி உள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே சட்டம் 153,154 மற்றும் 175 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சிபிஐ குழு இன்று விசாரணையை தொடங்கி உள்ளது. விபத்து தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 40 பேர் உடலில் எந்தவித காயமும் இல்லாமல் இறந்து போன சம்பவம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பெட்டிகளில் இருந்து மீட்கப்பட்ட 40 பேரின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் தென்படவில்லை என்றும், மின்சார கேபிள் அறுந்து பெட்டிகள் மேல் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 40 பேர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 446

0

0