பாலியல் தொழில் TO பெண் தாதா… காதல் தொல்லை கொடுத்த பிரபல ரவுடி ; கூலிப்படையை வைத்து தீர்த்து கட்டிய தாய், மகள் உள்பட 8 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 5:12 pm
Quick Share

பிரபல ரவுடியை கூலி படையை ஏவி கொலை செய்த பாலியல் தொழில் செய்யும் தாய் மற்றும் அவரது மகள் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திராவின் நாகர்கர்னூல் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஹிமாம்பி. அவருடைய மகள் 19 வயது நசீமா. கணவரை பிரிந்த ஹிமாம்பி கடந்த 2015 ஆம் ஆண்டில் பிழைப்பிற்காக ஐதராபாத் சென்று அங்குள்ள யூசிப்குடா பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்றைப் பிடித்து குடியேறினார்.

போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டில் வாடகைக்கு மகளுடன் தங்கி இருந்த ஹிமாம்பி, வீட்டு வேலைகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் வீட்டு உரிமையாளரான போலீஸ் கான்ஸ்டபிளுக்கும், ஹிமாம்பிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி அந்த போலீஸ்காரரின் வருமானம் முழுவதையும் அவர் சுருட்டிக்கொண்டார். தொடர்ந்து தான் வாடகைக்கு வசித்து வந்த வீட்டையும் அந்த போலீஸ்காரருக்கு செய்த சேவைக்கு பலனாக தன் பேருக்கு எழுதி வாங்கி கொண்டார் ஹிமாம்பி. அதன்பின், “இந்த வீடு என்னுடையது, இனிமேல் நீ இங்கு வரக்கூடாது,” என்று கூறி அந்த போலீஸ்காரரையும் அங்கு வராமல் செய்துவிட்டார் ஹிமாம்பி.

பின்னர், அந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தார் ஹிமாம்பி. இதன் மூலம் அவருக்கு ஆயிரங்களில் ஆரம்பித்து லட்சங்களில் பணம் கொட்ட துவங்கியது. இந்த நிலையில் தன்னுடைய 19 வயது நசீமாவையும் அதே தொழிலில் இறக்கினார் ஹிமாம்பி. இதனால் அவருக்கு வருமானம் அதிகரித்தது.

மேலும், அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள் ஆகியோரின் அறிமுகமும் கிடைத்தது. இதனை பயன்படுத்தி வெளியூர்களில் இருந்து அழகிகளை வரவழைத்து தன்னுடைய தொழிலை விரிவாக்கம் செய்தார் ஹிமாம்பி.

அதே நேரத்தில் அவருக்கு ரவுடியும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான ராமு என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் ஒரு வாடிக்கையாளராக ஹிமாம்பி வீட்டுக்கு வந்து சென்றார் ராமு. அப்போது, அவருடைய கண் பார்வை ஹிமாம்பியின் 19 வயது மகள் நசீமா மீது விழுந்தது. இதை தனக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட ஹிமாம்பி, வாடிக்கையாளர் ராமுவிடமிருந்து அதிக பணத்தை வசூல் செய்ய துவங்கி மகளை அவருக்கு விருந்தாக்கினார்.

இதன் மூலம் அவரிடம் கோடிகளில் பணம் குவிந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அவருக்கும், ராமுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பிரச்சனையாக மாறியது. பாலியல் தொழில் மூலம் கிடைத்த உள்ளூர் ரவுடிகளின் அறிமுகம் மூலம் குட்டி தாதாவாக வலம் வந்து கொண்டிருந்த ஹிமாம்பி, அவ்வப்போது கட்டப்பஞ்சாயத்து நடத்துவது, மிரட்டி பணம் பறிப்பது ஆகியவை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு பலமுறை சிறைக்கு சென்று வந்திருக்கிறார்.

இந்த நிலையில், தன்னுடைய மகளை வேறு யாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க கூடாது என்று வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்த ராமுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் ஹிமாம்பி. நான்கு நாட்களுக்கு முன் தனக்கு வாடிக்கையாளராக அறிமுகம் ஆகிய ஆறு பேரை பயன்படுத்தி, தன்னுடைய மகள் மூலம் ராமுவுக்கு செல்போனில் அழைப்பு விடுத்து, ராமுவை ஹைதராபாத்தில் உள்ள எல்என் நகர் பகுதிக்கு வரவழைத்தார் ஹிமாம்பி.

அங்கு தயாராக காத்திருந்த கூலிப்படையினர், அந்த பகுதியில் கட்டுமானத்தில் இருக்கும் கட்டிடம் ஒன்றுக்கு ராமுவை தூக்கி சென்றனர். பின்னர் 50க்கும் மேற்பட்ட முறை ராமுவை கத்தியால் குத்தி கொலை செய்த அவர்கள், அவருடைய மைத்துனருக்கு வீடியோ கால் செய்து மாமன் உடலை எடுத்துச் செல் என்று கூறி தொடர்பை துண்டித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

அங்கு வந்து சேர்ந்த ராமுவின் மைத்துனர் தன்னுடைய மாமன் உடலை பார்த்து கதறி அழுது போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலையின் பின்னணியில் ஹிமாம்பி, அவருடைய மகள் நசீமா, கூலிப்படையை சேர்ந்த ஆறு பேர் போன்ற கும்பல் ஆகியோர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எட்டு பேரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Views: - 265

0

0