பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணப்படுத்தி மானபங்கம்… மணிப்பூரை தொடர்ந்து மேற்குவங்கத்தில் நடந்த அட்டூழியம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2023, 10:11 am
West Bengal - Updatenews360
Quick Share

மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி பிரிவு மக்கள் இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் மோதல் இருந்து வருகிறது. இந்த மோதல் பல இடங்களில் வன்முறையாக மாறியது. வீடுகள், கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் 150க்கும் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வன்முறையின்போது கடந்த மே மாதம் 4ம் தேதி பைனோம் கிராமத்தில் 2 குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியானது.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் கலவரம் குறித்து எதுவும் பேசாத பிரதமர் மோடியே இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தான் தற்போது மேற்கு வங்காளத்தில் பாஜக வேட்பாளர் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு இழுத்து செல்லப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் சமயத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் தக்சின் பஞ்ச்லா பகுதியில் கடந்த 8 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது பாஜக பெண் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் துன்புறுத்தப்பட்டுள்ளார். அதாவது மணிப்பூரை போல் பாஜக பெண் வேட்பாளர் நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் செய்தார். அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹிமந்தா ராய் சிலருடன் சேர்ந்து வாக்குச்சாவடியில் என்னை தாக்கினர். மார்பு மற்றும் தலையில் கட்டையால் தாக்கி வெளியே தள்ளினர்.

இந்த வேளையில் ஹிமந்தா ராய் கூறியதன் பேரில் அலி ஷேக், சுக்மல் பஞ்சா ஆகியோர் சேலை, உள்ளாடைகளை கிழித்து நிர்வாணமாக்கி மற்றவர்களின் முன்னிலையில் பாலியல் தொல்லை கொடுத்தனர் என தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 382

0

0