தேர்தல் பத்திரத்தில் நம்பர் எங்கே..? சூடான உச்சநீதிமன்றம் ; SBI-க்கு மீண்டும் குட்டு..!!

Author: Babu Lakshmanan
15 March 2024, 12:51 pm
SBI
Quick Share

தேர்தல் பத்திரங்களில் இடம்பெற்றுள்ள எண்களை வெளியிடாதது ஏன் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கான நிதி திரட்டுவதற்காக தேர்தல் பத்திரங்கள் என்ற முறையை கடந்த 2018ம் ஆண்டு பாஜக தலைமையிலான அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையில் பல்வேறு மதிப்புகளி தேர்தல் பத்திரங்கள் அங்கீரிக்கப்பட்ட எஸ்பிஐ வங்கி கிளைகளில் விற்பனை செய்யப்படும்.

தனிநபர்கள் அல்லது பெருநிறுவனங்கள் தாங்கள் விரும்பும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் பத்திரங்களை பெற்று நன்கொடை வழங்கலாம். இந்த நிலையில், தேர்தல் பத்திர முறைக்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் பத்திர முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பளித்தது.

மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு வங்கி சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், அதனை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், 12ம் தேதி மாலைக்குள் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும், இல்லையேல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தது.

இதைத் தொடர்ந்து, பட்டியலை எஸ்பிஐ வங்கி வெளியிட்ட நிலையில், அதனை தேர்தல் ஆணையம் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிட்டது. அதில், அதிகபட்சமாக, மார்ட்டின் நிறுவனமான ப்யூச்சர் கேமிங் மற்றும ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் ரூ.1,368 கோடி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது. அதேபோல, தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பெற்ற கட்சிகளில் பாஜக முதலிடத்தில் உள்ளது. அந்தக் கட்சி ரூ.6,060.50 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. 6வது இடத்தில் திமுக ரூ.639 கோடி பெற்றுள்ளது.

இதனிடையே, எஸ்பிஐ கொடுத்த தேர்தல் பத்திர தரவுகளில் தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால், எந்த நிறுவனம் வழங்கிய நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன் என்று எஸ்பிஐக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், மார்ச் 18ம் தேதிக்குள் தேர்தல் பத்திர எண்களையும் வெளியிட வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்துள்ளது.

Views: - 200

0

0