நீண்ட நெடிய காத்திருப்புக்கு முடிவு கொண்டு வந்த பிரதமருக்கு நன்றி : ட்விட்டரில் நெகிழ்ந்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 8:44 pm
Annamalai Thx Modi - Updatenews360
Quick Share

தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசுக்கும், முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த மார்ச் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அதில், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, அதற்கான பல்வேறு காரணங்களையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செப்.14-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படுவோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கும் மசோதா வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு மக்களவையில் அரசியல் வேறுபாடுகள் கடந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரவளித்த நிலையில், இம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அதில், 1965ஆம் ஆண்டு தொடங்கிய காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்தது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நீண்ட நெடிய காத்திருப்புக்கு முடிவு கண்ட நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

Views: - 358

1

0