ஐபிஎல் வரலாற்றிலே இதுதான் முதல்முறை… ஒரு போட்டியில் 523 ரன்கள்… உலக கிரிக்கெட் அரங்கையே திரும்பி பார்க்க வைத்த ஆட்டம்..!!

Author: Babu Lakshmanan
28 March 2024, 8:59 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நேற்று நடந்த மும்பை-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பல்வேறு சரித்திர சாதனைகளை படைத்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கதில் இருந்தே அதிரடி காட்டியது. க்ளாசன் 34 பந்துகளில் 80 ரன்களும், அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ரன்களும், ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களும், மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு பெங்களூரூ அணி 263 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இதைத் தொடர்ந்து, விளையாடிய மும்பை அணியும் அதிரடி காட்டியது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் குவித்து வெறும் 31 ரன்களில் மட்டுமே தோல்வியை தழுவியது. இதன்மூலம், ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 523 ரன்கள் குவித்திருப்பது ஐபிஎல் வரலாற்றில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டி20 வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.

அதுமட்டுமில்லாமல், நேற்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்சர்கள் அடித்துள்ளன. ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய போட்டியாகவும் இது அமைந்துள்ளது.

Views: - 435

0

0