10 வருடம் காவல் உதவி ஆணையராக இருந்தவருக்கு 1 வருடம் சிறை தண்டனை : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2023, 5:05 pm
Chennai HC - Updatenews360
Quick Share

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் வசந்தகுமார். 1991- ல் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வந்த இவர், மதுரை காவல்துறை உதவி ஆணையராக பணி ஓய்வு பெற்றார்.

பதவியில் இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வசந்தகுமாருக்கு எதிராக, சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வசந்தகுமாரை விடுவித்து கடந்த 2014 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. வருமானத்தை மீறி சொத்து சேர்த்தை ஒப்புக் கொண்ட விசாரணை நீதிமன்றம், சொத்தின் மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் மிகாததால், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக கருத முடியாது எனக்கூறி வழக்கில் இருந்து விடுவித்தது.

இந்த தீர்ப்பு, அரசு ஊழியர்கள் மத்தியில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும், ஊழல் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையிட்டு மனு கடந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை வந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார் ஆஜராகி இவர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இந்த வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், முன்னாள் காவல்துறை உதவி ஆணையர் வசந்தகுமார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்தும் மேலும், அவரை விடுதலை செய்து பிறப்பித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தும் முன்னாள் காவல்துறை உதவி ஆணையர் வசந்தகுமார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்
அன்றைய தினம், அவருக்கான தண்டனை விவரத்தை அறிவிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக் வந்தபோது வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை விவரத்திற்காக நேரில் ஆஜரான முன்னாள் காவல்துறை உதவி ஆணையர் வசந்தகுமாருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்

Views: - 215

0

0