100 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம கும்பல்… வெளிநாட்டில் இருந்து லீவுக்கு வந்தவர் அதிர்ச்சி ; போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
30 September 2023, 11:37 am
Quick Share

திருவாரூர் ; மன்னார்குடியில் அருகே பூட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருணாச்சலம். இவர் சிங்கப்பூர் நாட்டில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சொந்த ஊருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வந்துள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும் சுஷ்மா என்ற மகளும் உள்ளனர்.

நீடாமங்கலம் அருகே சோனாபேட்டையில் அருணாச்சலத்தின் அம்மா யசோதா உடல்நிலைக் குறைவு இல்லாமல் இருந்துள்ளார். தகவல் அறிந்த அருணாச்சலம் மன்னார்குடி நெடுவாக்கோட்டையில் உள்ள அவரது வீட்டை பூட்டி விட்டு, தனது அம்மாவை பார்க்க குடும்பத்துடன் நேற்று மாலை சோனாபேட்டை சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை நெடுவாக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்த அருணாச்சலத்தின் வீடு பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அருணாச்சலம் வீட்டில் இருந்த பீரோவை பார்த்த போது, பீரோவை உடைத்து அதில் இருந்த 100 பவுன் நகை, பத்தாயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ந்து போனார்.

இதுகுறித்து மன்னார்குடி காவல்துறைக்கு அருணாச்சலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் மன்னார்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள், தடயங்களை சேகரித்து வருகின்றனர். அருகில் உள்ள வீட்டிலுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

மன்னார்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 263

0

0