ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம் : கொலை செய்தது அம்பலம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 1:51 pm
Crime
Quick Share

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம் : கொலை செய்தது அம்பலம்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காடியார் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 60). அவரது மனைவி அன்னபூரணி (வயது52).

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் மூத்த மகன் சந்தோஷ்குமார்(வயது 30) திருமணம் ஆகி தனது தந்தை தாய் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இன்னொரு இளைய மகன் ராஜேஷ் வயது (27) பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார், இந்த நிலையில் ராதாகிருஷ்ணன், அன்னபூரணி, சந்தோஷ்குமார், மூன்று பேரும் சேர்ந்து பழங்கூர் எல்லைப் பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உரம் வைப்பதற்காக 16.12.2023 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெங்களூருவில் பணியாற்றி வரும் ராஜேஷ் தனது தந்தை மற்றும் அண்ணன் சந்தோஷ்குமார் ஆகிய இருவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக செல்போனில் தொடர்பு கொண்டும் அவர்கள் இருவரும் செல்போனை எடுக்கவில்லை என்பதால் தனது ஊரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் மூவரையும் பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்காத நிலையில், அவரது உறவினர்கள் இன்று மதியம் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான விவசாய கரும்பு தோட்டத்தில் தேடிப் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், அங்குள்ள கரும்பு மற்றும் மக்காசோளம் தோப்பில் அவர்கள் மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பெயரில் விரைந்து வந்த திருக்கோவிலூர் டி எஸ் பி மனோஜ் குமார் தலைமையிலான போலீசார் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர டிஎஸ்பி மனோஜ்குமார் விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தபோது,அந்த விசாரணையில், பக்கத்து நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி, ராதாகிருஷ்ணன் உள்பட 3 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து, 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் அவரது மனைவி நாவம்மாள், மகன் தாமரைச்செல்வம் ஆகிய 3 பேரை போலீசார் இன்று கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான, மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம், இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 346

0

0