பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து ஓட்டலுக்குள் புகுந்ததால் பரபரப்பு : அடிக்கடி பழுதாகும் பேருந்தை சிறைப்பிடித்த மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 December 2022, 7:44 pm
Bus Accident -Updatenews360
Quick Share

கோவையில் இருந்து ஆனைகட்டி வழியாக கேரள மாநிலம் மன்னார்காட்டிற்கு அரசு பேருந்து (TN38N2910) இயக்கப்பட்டு வருகிறது. இது ஒரு மலைப்பகுதியாகும்.

கோவையில் இருந்து புறப்படும் பேருந்து ஆனைக்கட்டியில் சிறிது நேரம் போடப்படும் பின்னர் மன்னார்காட்டிற்கு செல்லும். இன்று மதியம் வெள்ளிங்கிரி என்பவர் இப்பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது பிரேக் பிடிக்காமல் ஆனைக்கட்டி பகுதியில் இருந்த ஒரு டீ கடையில் மோதியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இப்பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் சிப்ட் முடிந்து இறங்கிவிட இப்பேருந்தை குப்புராஜ் என்ற ஓட்டுநர் ஓட்டிவந்துள்ளார். இவருக்கு வண்டியில் பிரேக் பிடிக்காததை வெள்ளிங்கிரி தகவல் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் அதே போல் கோவையில் இருந்து சென்ற போது அதே பேருந்து மீண்டும் ஆனைகட்டியில் நிறுத்த முற்படும் போது பிரேக் பிடிக்காமல் அங்கு ஐயப்பன் கோவில் பூஜைக்காக போடப்பட்டிருந்த பந்தலை இடித்துக் கொண்டு அருகே இருந்த ஹோட்டலுக்குள் புகுந்து நின்றுள்ளது.

இந்த விபத்தில் ஒரு சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அங்கு நிறுத்தியிருந்த ஒரு காரும் சேதமடைந்துள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த மற்றொரு அரசுப் பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள் கிளை மேலாளளர் அங்கு வர வேண்டும் என தெரிவித்தனர்.

பின்னர் சிறை பிடிக்கப்பட்ட பேருந்து விடுவிக்கப்பட்டது. ஆனைக்கட்டி மலைப்பகுதியில் இயங்கும் அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்குவதாகவும் இதனால் அடிக்கடி பேருந்துகள் பழுதடைந்து விபத்திற்குள்ளாவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Views: - 364

0

0