பட்டப்பகலில் பயங்கரம்…. இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

Author: Babu Lakshmanan
11 February 2024, 12:50 pm
Quick Share

ஸ்ரீவைகுண்டம் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே உள்ள பற்பநாதபுரத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் ஐயப்பன் என்ற சுரேஷ்(27). இவர் செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மரிய லூசியா என்ற மனைவி உள்ளார்.

நேற்று மதியம் ஒரு மணி அளவில் செய்துங்கநல்லூரில் பொருட்கள் வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். செய்துங்கநல்லூர் அருகே உள்ள சத்தக்காரன்பட்டி இசக்கியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் இவரை தடுத்து நிறுத்தியது. உடனே சுதாரித்துக் கொண்ட ஐயப்பன் தனது இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

ஆனால் அவரை விடாமல் துரத்திய இரண்டு பேரும் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ஐயப்பனுக்கு தலை, கழுத்து, கைகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே ஐயப்பன் உயிரிழந்தார். உடனே அவரை வெட்டிய அந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.
இதுகுறித்து அந்த வழியாக வந்த பொதுமக்கள் இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்டதால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம் அருகே கூலித் தொழிலாளி வேலைக்கு சென்று திரும்பும் போது அவரை வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 303

0

0