கல்லூரி விடுதியில் இருந்து நர்சிங் மாணவி சடலமாக மீட்பு.. ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் : சக மாணவிகளுடன், தாய் போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2023, 8:22 pm
Suicide
Quick Share

விடுதியில் இருந்து நர்சிங் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு.. ஆபாசமாக பேசிய கல்லூரி முதல்வர் : சக மாணவிகளுடன், தாய் போராட்டம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து இருங்களூர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணா செவிலியர் கல்லூரி உள்ளது. கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பேரா மெடிக்கல், பார்மசி, நர்சிங், யோகா என பல பிரிவுகளில் படித்து வருகின்றனர். மேலும் இக்கல்லூரியில் 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சேர்ந்த மலைவாழ் இன மக்கள் முருகேசன், ஓமனா தம்பதியரின் மகள் சத்திய ப்ரீத்தி (வயது 20) இந்த கல்லூரியில் இறுதியாண்டு நர்சிங் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சத்திய ப்ரித்தி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் போலீசாருக்கும், இறந்த மாணவி பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜித் தங்கம் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவியின் இறப்பு குறித்து சந்தேகம் இருப்பதாக சக மாணவிகள் இறந்த மாணவியின் பெற்றோர் உறவினர்கள் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லக்கூடாது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவிகளும் இறந்த மாணவியின் தாய் கூறும் போது… கல்லூரி விடுதியில் இருந்து அனுமதி வாங்கி வீட்டிற்கு சென்றால் கல்லூரி முதல்வர் ஆபாச வார்த்தைகளால் பேசுகிறார். இதை வீட்டில் சொன்னால் படிப்பு நின்று விடும் என்ற பயத்தினால் வீட்டிற்கு தெரிவிக்காமல் இருந்து வருகிறோம்.

மேலும் ஸ்காலர்ஷிப் பணத்தில் தான் படித்து வருகிறோம். ஸ்காலர்ஷிப் வரவில்லை என்றால் பணத்தை கட்டு என கட்டாயப்படுத்தி ஆபாச வார்த்தைகளில் கல்லூரி முதல்வர் பேசியதால் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கண்ணீர் மல்க சக மாணவிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று இறந்த சத்திய ப்ரீத்தி மாணவியின் தாய் கூறும் போது…
எனது மகள் கல்லூரியில் தங்கிப் கல்வி உதவித் தொகையுடன் படித்து வந்தால், உதவித்தொகை வருவதற்கு காலதாமதம் ஆவதால் என்னை பணத்தை கட்ட சொல்லி கட்டாயப்படுத்தி ஆபாசமாக கல்லூரி முதல்வர் தொலைபேசியில் பேசினார்.

இதுகுறித்து நான் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்து அவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்தனர். அங்கு கல்லூரி முதல்வரை அழைத்து விசாரித்தும் உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி முதல்வர் எனது மகளை ஆபாசமாக பேசி திட்டி உள்ளார் இதில் மனம் உடைந்து எனது மகள் தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனது மகள் இறப்பிற்கு முழு காரணம் கல்லூரி முதல்வர் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Views: - 2305

23

3