சாலையில் சென்ற பெண்ணை கடித்து குதறிய வெறிநாய்… தைரியாமாக நாயை மடக்கி பிடித்து எஸ்கேப்பான வீரமங்கை ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
4 March 2023, 2:28 pm
Quick Share

மதுரையில் அதிகரிக்கும் வெறிநாய் தொல்லைகள் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லக்கூடிய பொதுமக்களையும், குழந்தைகளையும் கடித்து காயப்படுத்துவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், காயம்பட்ட சிறுவர்கள், முதியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை பந்தடி 9ஆவது தெரு பால்மல் குறுக்குத் தெரு பகுதியில் கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலைக்காக நடந்து சென்றுள்ளார். அப்போது, கையில் சாப்பாட்டு கூடையுடன் சென்ற அந்த பெண்ணை, எதிரில் வந்த வெறிநாய் ஒன்று திடீரென தொடை மற்றும் கைகளில் கடித்து குதற தொடங்கியது.

இதனையடுத்து, அந்த பெண் நீண்ட நேரம் போராடி நாயின் கழுத்தைப் பிடித்து தப்பிக்க முயன்றார். ஆனாலும் நீண்ட நேரமாக நாய் கடித்துக் கொண்டே இருந்தது. ஒருவழியாக, நாயின் கழுத்தை பிடித்த பின்பாக, நாய் கடிப்பதை விட்ட நிலையில், அவர் வைத்திருந்த சாப்பாட்டுக்கூடையை மட்டும் கவ்விச் சென்றது.

இதனை தொடர்ந்து அதே பகுதியில் சாலையில் சென்ற மற்றொரு சிறுவனையும் அதே நாய் கடித்துள்ளது. இதனையடுத்து நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த அந்த பெண் மற்றும் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மதுரை மாநகரின் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தரக்கூடிய பகுதியான திருமலை நாயக்கர் மஹால் அருகே உள்ள பகுதிகளில், இதுபோன்று வெறிநாய் தொல்லைகள் அதிகமாக இருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இது குறித்து மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களுக்கு உரிய தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

Views: - 403

1

0