களைகட்டிய ஆடிப்பெருக்கு திருவிழா… காவிரி ஆற்றுப் படித்துறையில் குவிந்த புதுமண தம்பதிகள்…. இப்படியும் ஒரு சம்பிரதாயாமா…?

Author: Babu Lakshmanan
3 August 2023, 11:02 am
Quick Share

ஆடிப்பெருக்கு திருவிழா காவிரி ஆற்றுப் படித்துறையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்தனர்.

ஆடிப்பெருக்கு திருநாள். ஏன் கொண்டாடுகிறோம்? ஆடி மாதம் 18ஆம் தேதியான இன்று ஆடிப்பெருக்கு. இதனை பதினெட்டாம் பெருக்கு என கூறுவதுண்டு. மழைக்காலத்தின் துவக்கமான ஆடி மாதத்தில் காவிரியில் நீர் பெருகி வரும் நாளையே ஆடிப்பெருக்கு நாளாக கொண்டாடுகிறோம்.

இந்நாளில் விவசாயிகள் புதிய விதை விதைத்து உழவுப் பணிகளை துவங்குவார்கள். மக்கள் யாவரும் காவிரி அன்னையை வேண்டி, ஆற்றங்கரையிலும், குளக்கரைகளிலும் சிறப்பு வழிபாடு செய்வார்கள் மேலும் நீர்நிலைகளுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இவ்வாறு நாம் வழிபடும் ஆடிப்பெருக்கு நாளை ஏன் ஆடி 18ஆம் தேதி கொண்டாடுகிறோம்.

மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் திருமண நாளில் அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்ட பின்பு, காவிரி தாயை வணங்கி புதிய தாலி கயிற்றை மாற்றிக் கொள்ளும் வைபவம் நடைபெறும். இன்று ஆடி பதினெட்டாம் நாளின் ஒரு பகுதியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்று ஆடிப்பெருக்கு முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் காவிரி ஆற்றில் தேங்காய் பழம், வாழை இலையில் அரிசி வைத்து படையல் இட்டு பூ, பழம் , வெற்றிலை , தீபம் ஏற்றி, காவிரி தாய்க்கு சூடம் காட்டி காவிரித் தாயை வணங்கினர்.

இதே போல், புதுமண தம்பதிகளும் புதிய தாலி கயிறு மாற்றி காவிரித்தாயை வழிபட்டனர். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து , கையில் மஞ்சள் கயிறு கட்டியும் காவிரி தாயை வணங்கினர். இந்த வருடம் திருச்சி காவிரி ஆற்றில் சுமார் 10,000 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் ஆடி 18 கொண்டாடி வருகின்றனர்.

ஆடி 18 விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாதவாறு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொது மக்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு தீயணைப்பு துறையினர், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, காலை முதலே கோவை பேரூர் நொய்யல் ஆற்றுக்கு பொதுமக்கள் வரத் தொடங்கினர். பின்னர் அவர்கள் ஆற்றுப்பகுதியில் குவிந்தனர். நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் அமர்ந்து இறந்து போன குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலைப் படையல் வைத்து 7 சப்த கன்னிமார் வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த பசுமாடு கன்றுகளுக்கு அகத்திக்கீரைகள் வழங்கியதோடு நொய்யல் ஆற்றோரம் அமர்ந்திருந்த சாதுக்கள் மற்றும் யாசகர்களுக்கு அன்னதானங்களை வழங்கினர். இதேபோல் புதுமண தம்பதிகள் தாலியை மாற்றிக் கொண்டனர்.

இதேபோல் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபாடு செய்தனர். மேலும் ஆற்றில் புனிதநீராடிவிட்டு பேரூர் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Views: - 288

0

0