உணவு டெலிவரி ஊழியர் வெட்டிப் படுகொலை… கொலையாளிகளின் வீட்டை சூறையாடிய உறவினர்கள்.. நெல்லையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
3 August 2023, 11:52 am
Quick Share

நெல்லை ; நெல்லை கீழ்வீரராகவபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக உணவு டெலிவரி நிறுவன ஊழியர் தாமிரபரணி நதிக்கரையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை கொக்கிரகுளத்தை அடுத்த கீழ வீரவராகபுரத்தை சேர்ந்தவர் முகேஷ். இவருக்கு சுபிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிகொண்டு இருந்த போது, குருந்துடையார்புரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சுடலை மாடசாமி கோவில் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் முகேஷை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இவரது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடம் வந்த அக்கம் பக்கத்தினர், இரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் தலைமையிலான போலீஸார் முகேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூர் ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த முகேஷ் மனைவி சுபிதா பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தங்கள் குடும்பத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவர் குடும்பத்திற்கும் இருந்த முன்விரோதம் காரணமாகவும், அடிதடி சம்பவம் தொடர்பான வழக்கு காரணமாகவுமே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் உயிரிழந்த முகேஷ் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கொலையாளிகள் என சந்தேகப்பட்ட சின்ன குட்டி மற்றும் அவர்களது சகோதரர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, யாரும் வீடுகளில் இல்லாத நிலையில் கொலைக்கு இவர்கள்தான் காரணம் என ஆத்திரமடைந்து, அவர்களது வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சூறையாடினர்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காமராஜர் புரம், கீழவீரராகவபுரம் பகுதியில் போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 405

0

0