திமுக வேட்பாளருக்கு பயம் வந்திடுச்சு… ரஜினி ரசிகர்கள் ஆதரவு எனக்கு தான் ; ஏ.சி.சண்முகம் நம்பிக்கை ..!!!

Author: Babu Lakshmanan
28 March 2024, 11:35 am
Quick Share

வேலூர் எம்பி தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் என் பெயரில் ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் 2014ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு 6 லட்சத்து 23 ஆயிரம் கோடி வரியாக பெற்றுள்ளது.
ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு ஆறு லட்சத்து 90 ஆயிரம் கோடியாக நிதியினை வழங்கி உள்ளது.

சுமார் 73 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு அதிகமாக வழங்கியுள்ளது. தமிழகத்திற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு திட்டங்களை தமிழக அரசு மாநில அரசின் திட்டங்களைப் போல செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்திற்கு மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் மானிய நிதியாக பிரதம மந்திரி கிசான் திட்டத்தில், ஒன்பதாயிரம் கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்திற்காக 72 லட்சம் கோடி நிதி உதவி மத்திய அரசு வழங்கியுள்ளது. சிறு தொழில் துவங்க மத்திய அரசு 2.43 லட்சம் கோடி நிதியினை வழங்கியுள்ளது.

கிராமப்புற சாலைகளை மேம்படுத்தவும் புதிய சாலைகளை அமைக்கவும் 16,350 கோடி ரூபாய் நிதியினை வழங்கி உள்ளது. ஒன்றரை லட்சம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவுத் திட்டத்திற்கு 355 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இது போன்ற மத்திய அரசு பல்வேறு மக்களின் நல திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிகளை ஆதரித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகத்திற்கு வர உள்ளார். வேலூரிலும் பிரதமர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார், எனக் கூறினார்.

தங்களுடைய கூட்டணி கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்ய அழைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ரசிகர்கள் எனக்கு ஆதரவு தருவார்கள். அரசியலுக்கு வர ரஜினிகாந்துக்கு விருப்பமில்லை, என்று கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஓபிஎஸ்-க்கு மட்டும் அல்ல, என் பெயரிலும் ஐந்து பேர் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளனர்.வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தான் வெற்றி பெற்று விடுவோனோ என்ற பயத்தில் தான்
இதுபோல செய்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி நாட்டில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் மூலம் மக்கள் பாஜகவுக்கு அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆவார், என்று கூறினார்.

Views: - 226

0

0