கையை விரித்த காதர்… ரூ.1.70 கோடி வீடு போச்சு ; ஒப்பந்ததாரரை நம்பி ஏமாந்து போன நடிகர் பாபி சிம்ஹா குமுறல்!!

Author: Babu Lakshmanan
28 September 2023, 12:04 pm
Quick Share

தனது பெற்றோருக்காக வீடு கட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டு கொடைக்கானல் ஒப்பந்ததாரர் ஏமாற்றி விட்டதாகவும், இந்த பிரச்சனையில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் நடிகர் பாபி சிம்ஹா புகார் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் பழனி சாலையில் பெருமாள் மலையை அடுத்து உள்ள வில்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பேத்துப்பாறையில் நடிகர் பாபி சிம்ஹா தனது பெற்றோருக்காக வீடு கட்டுவதற்கு கொடைக்கானலை சேர்ந்த காசிம் மகன் ஜமீர் என்பவர் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஜமீரின் மைத்துனரான அமானுல்லா மகன் காதர் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு பரிந்துரை செய்துள்ளார். பாபி சிம்ஹாவும் காதரும் நண்பர்களாக உள்ளனர்.

இதன் அடிப்படையில் காதர் கொடுத்த ரெக்கமண்டேசன் அடிப்படையில் ஜமீர் உடன் பாபி சிம்ஹா வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். காதர் வெளிநாட்டில் இன்ஜினியரிங் படிப்பு படித்ததாக கூறப்படுகிறது. பாபி சிம்ஹா ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு வீடு கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்து உள்ளார். கூடுதலான பணிகள் செய்ய வேண்டி இருப்பதாக கூறி ஒப்பந்ததாரர் ஜமீர் பாபி சிம்ஹாவிடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் பணம் பெற்று உள்ளார்.

ஆனால் வீட்டின் பணிகள் முடிக்கப்படவில்லை. இதை அடுத்து பாபி சிம்ஹா வீட்டின் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. ஜமீர் மேலும் கூடுதலாக பணம் கேட்டு உள்ளார். இதற்கு பாபி சிம்ஹா தனது வீட்டின் பணிகளை முடித்தவுடன் பணம் தருவதாக கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, ஒப்பந்ததாரர் ஜமீர் பணிகளை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளார். இதை அடுத்து, பாபி சிம்ஹா, ஜமீர் மற்றும் இவரது தந்தை இவர்களது உறவினரான உசேன் பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் மீது கொடைக்கானல் கோட்டில் மனு தாக்கல் செய்து, இதன் அடிப்படையில் கொடைக்கானல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல, பாபி சிம்ஹா மற்றும் கே ஜி எஃப் பட வில்லன் நடிகர் மற்றும் இருவர் மீது உசேன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உசேன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது தரப்பு விளக்கத்தை பேட்டியாக கொடுத்தார். இதை அடுத்து, நடிகர் பாபி சிம்ஹா தரப்பில் அவரது வழக்கறிஞர் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது தரப்பு விளக்கத்தையும் கொடுத்தார்.

இந்நிலையில் தனது வீட்டு பணிகள் எப்படி செய்யப்பட்டு உள்ளன என்று விளக்கும் நிலையில், கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா தற்போது கட்டி வரும் புதிய வீட்டின் வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இதில் அவர் கூறியதாவது :- ஜமீரின் மைத்துனரான காதர் எனது நண்பர். அவர் சொன்னதால் ஜமீருக்கு வீடு கட்ட ஒப்பந்தம் செய்து கொடுத்தேன். ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கூடுதல் பணிகள் செய்ய வேண்டி இருப்பதால் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன். இதற்கான ரெக்கார்டுகள் என்னிடம் உள்ளன. நான் வீட்டில் பால் காய்ச்சுவதற்காக வந்த பொழுது வீட்டின் பணிகள் முடியாமல் அரைகுறையாக இருந்ததை பார்த்தேன். அன்று வீட்டின் பாலை காய்ச்சி விட்டு பணிகளை விரைவில் முடிக்க ஜமீரிடம் கூறினேன். ஜமீர் கூடுதலாக பணம் கேட்டார்.

ஏற்கனவே செலவு செய்த பில் தொகைகளை என்னிடம் ஒப்படைத்து விட கூறினேன். அன்றிலிருந்து அவர் பல்வேறு காரணங்களை கூறி பணிகளை நிறுத்திவிட்டார். இந்த வீட்டின் பணிகளை பத்திரிக்கையாளர்கள் முன்பு காண்பித்துள்ளேன். இது வீடு அல்ல. சினிமா செட்டிங்தான். இதனுடைய பேஸ்மென்ட் முதல் அனைத்து பணிகளும் தரமற்ற நிலையில் உள்ளது.

வேறு ஒரு பொறியாளரை கொண்டு ஆய்வு செய்தேன். இந்த வீடு எந்த நிலையிலும் இடிந்து விழக் கூடும் என்று அவர் கூறியுள்ளார். என்னை ஏமாற்றி பணத்தைப் பெற்றுக் கொண்டு, எனது தாய், தந்தைக்கு வீடு கட்டுவதை இவர்கள் ஏமாற்றி விட்டனர், தடுத்தும் வருகின்றனர். நான் போலியாக பட்டா வைத்து விதிமுறைகளை மீறி கட்டியதாகவும் என் மீது குற்றம் சாட்டுகின்றனர். மின்சார இணைப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.

சரியான ரெக்கார்டுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. வீடு கட்ட ஒப்பந்தம் பெற்றவர் தான் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிடங்களை கட்ட வேண்டும். 30 ஆண்டுகளாக இங்கே நான் வசித்து வருகின்றேன். தற்போது எனக்கு கொலை மிரட்டலும் செய்து வருகின்றனர். நான் நீதிமன்றத்தை நாடி உள்ளேன். நீதிமன்றம் எனக்கு சரியான தீர்ப்பு வழங்கும். தற்போது நடைபெற்று உள்ள இந்த கட்டிடப் பணிகள் அனைத்துமே மிக மிக மோசமான நிலையில் உள்ளது.

என்னிடம் பணத்தைக் கொண்டு ஏமாற்றிவிட்டு, எனக்கே கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அவருக்கு சப்போர்ட்டாக சமூக ஆர்வலர்கள் என்னை மிரட்டுகின்றனர். என் போன்றவர்களுக்கே இப்படி ஒரு நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும். எனவே, என்னை ஏமாற்றியவர்கள் மீது நீதிமன்றம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பாபி சிம்ஹாவின் வழக்கறிஞர்கள், பாபி சிம்ஹாவின் தந்தை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நடிகர் பாபி சிம்ஹாவின் வீட்டை ஆய்வு செய்த பொறியாளர்கள் கூறியதாவது:- இந்த வீட்டின் அடித்தளமே மிக மோசமான நிலையில் உள்ளதை நாங்கள் பார்த்துள்ளோம். அட்டைப்பெட்டியை வைத்து வீடு கட்டி உள்ளோம் என்று கூறி உள்ளது போன்று இருக்கின்றது, என்று அவர்கள் கூறி கூறினர். இந்த பிரச்சனை கொடைக்கானலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Views: - 956

0

0