நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா மீது பாஜக பரபரப்பு புகார் : கீழடி அருங்காட்சியகத்தில் நடந்தது என்ன?!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2023, 9:05 pm
Surya Jyothika - Updatenews360
Quick Share

மதுரை பா.ஜ.க மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன், வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தென் மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கர்க்கை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8 கட்ட அகழ்வாராய்சியில் 2800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான பொருட்களை தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கீழடி அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு முதல்வர் அதனை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறந்து வைத்ததார்.

காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பொதுமக்கள் நுழைவு கட்டணம் செலுத்தி அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என அறிவிக்கபட்ட நிலையில் கடந்த 1ம் தேதி அருங்காட்சியகத்திற்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி. சுவெங்கடேசன் மற்றும் நடிகர்கள் சூர்யா, சிவகுமார், ஜோதிகா அவர்களது குடும்பத்தினர் குறிப்பிட்ட கால வரையறை நேரத்திற்கு முன்பாகவே கீழடி அருங்காட்சியகத்திற்குள் சென்றதாகவும், கண்காட்சி திறக்கும் நேரமான பத்து மணிக்கு மேலாகியும் பொதுமக்கள் அனுமதிக்கபடவில்லை எனவும், பள்ளி மாணவ மாணவிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பல மணி நேரம் கால் கடுக்க கடும் கோடை வெயிலில் நிறுத்தி வைக்கபட்டதாகவும், நடிகர்கள் விதி முறைகளை மீறி உள்ளே சென்றதாக பாஜகவினர் தனது மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனது தனிப்பட்ட நலனுக்காக எம்.பி.வெங்கடேசன் பாராளுமன்ற நடத்தை விதிகளை மீறி நடிகர்களை அழைத்து சென்றதாகவும், இதற்கு அனுமதி அளித்த அனைத்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி வரும் காலத்தில் பொது மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தின் பராமரிப்பு, மற்றும் நிர்வாகத்தை மத்திய அரசின் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி புகார் மனுவைஐ. ஜி அஸ்ரா கர்க்கிடம் கொடுத்துள்ளனர்.

Views: - 254

0

0