அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொலை… கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம்..? திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
3 October 2023, 11:55 am
Quick Share

திருவள்ளூர் ; விச்சூர் துணைத் தலைவரின் கணவரும், அதிமுக பிரமுகருமான சுமன் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வீச்சூர் ஊராட்சியில் ஊராட்சி துணைத் தலைவர் வைதேகி. இவரது கணவர் சுமன் (39). இவர்களுக்கு மாதேஷ் (10) என்ற ஒரு மகன் உள்ளார். ஊராட்சி மன்ற துணை தலைவரின் கணவர் விவசாயம் செய்வதாகவும், மேலும், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகியான சுமனுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் சங்கருடன் இருக்கும் சரண் இருவருக்கும், உள்ளூரில் பணிகளை எடுத்து செய்வதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மேலும், ரியல் எஸ்டேட் தொழிலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் சங்கரின் தம்பிதான் சுமன். அதாவது, பெரியப்பாவின் மகன் தான் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்.

இந்த நிலையில், ஊரில் உள்ள பெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு தண்ணீர் டேங்க் அருகில் சுமன், பெருமாள் கோவில் திருவிழாவிற்காக நோட்டீஸ் அளிப்பதற்காக சென்றதாகவும், அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் சிலர் சுமனை பின் தொடர்ந்து வந்து சரமாரியாக தலையில் வெட்டியதாக தெரிகிறது.

ரத்த வெள்ளத்தில் இருந்த சுமனை உறவினர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும்போது சுமன் உயிரிழந்தார். கொலை சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழாவில் சரண் என்பவருக்கும் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். அப்போது, சுமனின் அண்ணன் சுரேஷ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆகி உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண், சுரேஷின் தம்பியான ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் சுமனை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விச்சூரில் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 327

0

0