தண்ணீர் பஞ்சத்தில் மக்கள்… கொடைக்கானல் சுற்றுலா அவசியமா..? இவங்க குடும்பம் மட்டுமே அனுபவிக்கனுமா..? அதிமுக கேள்வி!!

Author: Babu Lakshmanan
30 April 2024, 5:14 pm
Quick Share

அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சராக வந்தால் தான் தமிழக உரிமைகளை காக்க முடியும் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை GST சாலையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, தண்ணீர் – நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தண்ணீர் பழம், திராட்சை, வெள்ளரி, சர்பத் மற்றும் குளிர்பானங்கள் வழங்கியனார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- இந்த நேரத்தில் குடும்பத்துடன் முதல்வர் கொடைக்கானல் செல்வது வியப்பாக மக்கள் பார்க்கிறார்கள். 4 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என தெரிவித்த நேரத்தில் மக்களுக்காக திட்டங்கள் அறிவித்திருக்க வேண்டும். மக்களுக்கு கோடை காலத்தில் நல்லது செய்யாமல் முதல்வர் குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்கிறார்.

தற்போது கொடைக்கானலில் வனப்பகுதியில் தீப்பற்றி எரிகிறது.? அதை அணைக்க நடவடிக்கை எடுக்காமல் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வது ரோமாபுரியில் தீ பற்றி எரியும் போது மன்னன் பிடில் வாசித்தது போல உள்ளது. குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆட உள்ளது.? மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள தமிழக முதல்வர் பிரச்சாரத்திற்கு செல்லாமல் தற்போது ஓய்வெடுக்கச் செல்கிறார்.

மேலும் படிக்க: கேஎல் ராகுல், ருத்து-க்கு கல்தா… டி20 உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு ; முழு விபரம் இதோ..!

இந்தியா கூட்டணியை நம்பாமல், அதன் மீது உள்ள நம்பிக்கை அற்ற சூழலில் தான் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்று இருக்கிறார். ஒரு அபத்தமான செயல், ஒரு முதல்வர் செய்யக்கூடிய செயல் அல்ல என நினைவுறுத்த விரும்புகிறேன், எனக் கூறினார்.

மதுரை வந்த முதல்வரிடம் பாஜக நிர்வாகி கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க வந்த போது, கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான கேள்விக்கு.?, தற்போது மதுரை பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஒத்தக்கடை பகுதியில் வியாபாரியின் கடைகளை அடித்து உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.

காவல்துறை பொறுப்பை கையில் வைத்திருக்கிற முதல்வர் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். முதலில் பெண்கள் தான் நடமாட முடியாமல் இருந்தார்கள். ஆனால், சாதாரண மனிதர்களை பகல் நேரத்தில் இப்போது ஒத்தக்கடை பகுதியில் நடமாட முடியாமல் தவிக்கிறார்கள். காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற முதல்வர் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

போதை காளான் விளைவிக்கின்ற கொடைக்கானலுக்கு சென்று இருக்கிறார். இப்படிப்பட்ட கொடைக்கானலுக்கு செல்லும் முதல்வர் கடந்த ஒரு வார காலமாக நிர்வாக ரீதியாக தமிழகம் முழுவதும் நடைபெறும் போதை கலாச்சாரத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்.? திமுக நிர்வாகிகள் தான் போதை மற்றும் குட்கா உள்ளிட்ட போதை வஸ்து கடத்தல்கள், ஜாபர் சாதிக் முதல் திமுக கவுன்சிலர் வரை திமுகவினர்தான் முன்னிலையில் உள்ளனர்.

ஆளுங்கட்சியே இந்த போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக எல்லோரும் நினைக்கிறார்கள். முதல்வரின் இந்த கொடைக்கானல் பயணத்தை ரத்து செய்துவிட்டு குடிநீர் பிரச்சனை போதைப்பொருள் கலாச்சாரத்தை தடுக்க உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மோடியோ, ராகுலோ, தமிழகத்திற்கு யார் நல்லது செய்தாலும் ஏற்போம் என கூறி வருவது குறித்த கேள்விக்கு.?, அதிமுகவை பொறுத்தவரை தமிழகத்திற்கு நல்லது செய்யக்கூடிய பிரதமர் தமிழக உரிமைகளை கேட்கக்கூடிய பிரதமர் வரவேண்டும் என தமிழகத்திற்கு விடிவு காலம் மத்திய அமைச்சரவையில் நீர்வளம், மனித வளம் மற்றும் உள்துறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதுவும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வந்தால் தான் தமிழகத்திற்கு விடிவுகாலம்.

ஏற்கனவே திமுக மற்றும் காங்கிரசைச் சேர்ந்த அவர்கள் அமைச்சராக இருந்தும் தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும், தமிழக உரிமையும் காக்கவில்லை. மத்திய அமைச்சரவையில் குறிப்பாக நீர்வளத்துறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள். அப்போதுதான், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான மேகதாது அணை, காவேரி மற்றும் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட ஜீவாதார பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

ஆகவே, மோடியை எதிர்பார்க்கவில்லை.! ராகுலையும் எதிர்பார்க்கவில்லை.! இவர்களைப் பிரதமராகத்தான் பார்க்க முடியுமே தவிர தமிழகத்திற்கு நல்லது செய்பவராக பார்க்க முடியாது. அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சராக வந்தால் தான் தமிழக உரிமைகளை காக்க முடியும் என்றார்.

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் மட்டுமல்ல, இந்தி மொழி வளர்ச்சியை நிதியை ஒதுக்கும் மத்திய அரசு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு எப்போதும் நிதி ஒதுக்குவதில்லை. எந்த அரசு வந்தாலும் மோடி அரசோ, அல்லது ராகுல் அரசோ தமிழ் மொழி வளர்ச்சியை அங்கீகரிப்பதில்லை.

தமிழகத்தில் மணல் கடத்தல், கள்ள சந்தையின் மது விற்பனை மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து தகவல் தரக்கூடிய சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கொடுக்கும் தகவலை காவல்துறையினர் பாதுகாப்பதில்லை. தமிழகத்தில் இது போன்ற சம்பவம் அதிகரித்துள்ளது. தகவலை பாதுகாக்கிறோம் என்று சொல்லக்கூடிய காவல்துறை வட்டாரத்தில் சில கருங்காலிகள், கருப்புஆடுகள் தகவல் வெளியே சொல்வதன் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது.

வெப்ப சூழலில் தமிழக முதல்வர் அதே இடம் கலந்து ஆலோசனை செய்து மக்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து இதுவரை பேசப்படவில்லை. தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் திமுக அரசு கோடை காலத்தில் ஏற்படக்கூடிய தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாலும், வருங்காலங்களில் திமுக ஆட்சிக்கு வராது என்பதை அறிந்து கொண்ட அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை எடுக்காமல் தற்போது நடவடிக்கை எடுக்கிறார்கள். எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. எதற்கு எதற்கும் குழு அமைத்திருக்கிறார் முதல்வர். 56 குழு அமைத்த முதல்வருக்கு வெப்ப காலத்தில் மக்களுக்கு எந்தெந்த வகையில் உதவ முடியும் என்பதற்கு குழு அமைத்து திட்டத்தை செயல்படுத்திருக்க வேண்டும். ஆனால் அந்தத் திட்டத்தையும் செய்யவில்லை. மக்கள் மீது கவனத்தை செலுத்தாத அரசாக திமுக உள்ளது, எனக் கூறினார்.

Views: - 146

0

0