பாலம் உடைந்ததால் நீரில் தத்தளிக்கும் அம்மன் கோவில்.. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு : தடுப்பணையில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2022, 12:30 pm
Noyyal 1 - Updatenews360
Quick Share

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள சிறு பாலம் உடைந்து கோவிலுக்கு செல்லும் வழி துண்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரை அடுத்த மங்களம் அருகே நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ளதாக கருதப்படுகின்ற இந்த தடுப்பணை, கட்டப்படும் போது நடுவில் உடைந்து கொண்டே இருந்ததால் நல்லம்மண் என்ற சிறுமி அங்கு உயிர்த்தியாகம் செய்தார்.

தொடர்ந்து அணை உடையாமல் இருந்தது. எனவே நல்லம்மனுக்கு அணை நடுவே கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த அணை ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

நல்லம்மன் தடுப்பணையில் தடுக்கப்படுகின்ற தண்ணீர் ராஜ வாய்க்கால் மூலமாக சின்ன ஆண்டிபாளையம் குளத்துக்கு சென்று பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது பெய்கின்ற தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வழக்கமாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் இந்த தடுப்பணையில், தற்போது மழை வெள்ளம் அருவியாக கொட்டுகிறது.

இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக நல்லம்மன் கோவிலுக்கு செல்கின்ற சிறு பாலம் ஒரு பகுதி உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது.

இதனால் கோவிலுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை வரும் பட்சத்தில் நல்லம்மன் கோவிலும் மூழ்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Views: - 568

0

0