தொடரும் அட்டூழியம்… இனி காலவரையற்ற வேலை நிறுத்தம் : இலங்கைக்கு எதிராக தமிழக மீனவர்கள் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2023, 7:54 pm
Quick Share

தொடரும் அட்டூழியம்… இனி காலவரையாற்ற வேலை நிறுத்தம் : இலங்கைக்கு எதிராக தமிழக மீனவர்கள் அறிவிப்பு!!

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர். தமிழக மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடல் எல்லை பிரச்சனையை காரணம் கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையின் ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டித்தன நடவடிக்கையால் மிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை கடும் பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சூழலில் இந்தியா சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக தமிழக அரசு சார்பில் டன் கணக்கில் இலங்கை மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனாலும் இலங்கை கடற்படையின் போக்கில் மாற்றம் தெரிந்தபாடில்லை. இதனிடயே தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற மீனவர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் பற்றி முடிவெடுக்கப்பட்டது. மேலும், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மீனவர்கள் கைது விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்றிரவோ நாளையோ இது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது கூட, இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவது பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 224

0

0