முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு… கரூரில் பாஜக நிர்வாகி கைது செய்து சிறையிலடைப்பு

Author: Babu Lakshmanan
1 January 2024, 2:25 pm
Quick Share

கரூரில் சமூக வலைத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வெளியிட்டு தவறான கருத்துக்களை பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த பனையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (44) இவர் பாஜக கரூர் பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் பொறுப்பில் உள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து, மாலை அணிவித்து முதல்வர் இறந்ததுபோல் தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.

மேலும், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணைத் தலைவராக உள்ள தீபக் என்பவரின் புகைப்படத்தையும் இணைத்து தவறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த தீபக் மன உளைச்சலுக்கு ஆளாகி, முதல்வர் குறித்து தவறான புகைப்படத்தை பதிவிட்ட முருகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டதற்காக பாஜக நிர்வாகி முருகேசனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 289

0

0