பிரதமர் வருகைக்கு முன்பே கூட்டணி இறுதியாகிவிடும் ; மறைமுகமாக தேமுதிக, பாமகவுக்கு கெடு விதிக்கும் பாஜக…!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 6:57 pm
Quick Share

திமுக ஆட்சியில் இருந்த போது தான் கர்நாடகாவில் பல அணைகள் கட்ட அனுமதி வழங்கியதாக தமிழக பாஜக மாநில விவசாயிகள் அணியின் தலைவர் ஜிகே நாகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில விவசாயிகள் அணியின் தலைவர் ஜிகே நாகராஜ் கூறியதாவது :- கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு பி.எம்.கிசான், இலவச எரிவாயு இணைப்பு மூலம் பயன் பெற்றுள்ளனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் தாக்குதல் கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருமணிமுத்தாற்றில் சாய ஆலை, வெள்ளி பட்டறை கழிவுகள் கலந்து வருவதால் அந்த தண்ணீர் விசமாக மாறி வருகிறது. காவிரி நீரை கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும். திமுக அரசின் பல திட்டங்கள் திமுக நிர்வாகிகளே பெற்று வருகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு சென்று சேராமல் மாநில அரசு தடுத்து வருகிறது.

அரிசி, பூண்டு விலை உயர்வுக்கு தமிழக அரசே காரணம். உரிய காவிரி நீரை தமிழக அரசு பெற்று தராததால் உற்பத்தி குறைந்து விட்டது. சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட 16 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்படுத்த படாமலே உள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும்

இன்று காவிரியில் தண்ணீர் வராமல் போனதற்கு திமுக தான் காரணம், திமுக ஆட்சியில் இருந்த போது தான் கர்நாடகாவில் பல அணைகள் கட்ட அனுமதி வழங்கியது. மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது.

இடைத்தரகர் மூலம் தூண்டி விட்டு டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு கட்டுபடுத்தும். பிரதமர் வருகைக்கு முன்பாகவே கூட்டணி கட்சிகள் முடிவாகி விடும், என தெரிவித்தார்.

Views: - 126

0

0