பிரதமர் மோடிக்கு நன்றி… உண்மையான கேப்டன்… விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது மிகப் பொருத்தமானது : அண்ணாமலை

Author: Babu Lakshmanan
26 January 2024, 12:43 pm
Quick Share

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது. பல்வேறு துறைகளில் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேரில் விருதுகளை வழங்கி கவிரவிக்க உள்ளார்.

இந்த நிலையில், கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது :- கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களுக்கு, பத்மபூஷன் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ள மாண்புமிகு பிரதமர் திரு மோடி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேப்டன் விஜயகாந்த் அவர்கள், தமது திரைப்பட வாழ்வில் பெரும்புகழ் பெற்றிருந்தவர். மேலும் அவர் ஒரு உண்மையான மக்கள் தலைவராக விளங்கியவர். மக்கள் நலனை மையமாகக் கொண்ட தமது அணுகுமுறையால், தமிழக அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்திய நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டது போல, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சமூக நெறிகளின் மொத்த உருவமாக, அனைவருக்கும் ஒரு உண்மையான கேப்டனாக வாழ்ந்தவர். அவருக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருது, மிகப் பொருத்தமானது, எனக் கூறினார்.

Views: - 797

0

0