மேட்டுப்பாளையம் அருகே உயிருக்கு போராடும் பெண் காட்டு யானை… ஜேசிபி உதவியுடன் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை!!

Author: Babu Lakshmanan
26 January 2024, 10:58 am
Quick Share

மேட்டுப்பாளையம் அருகே உயிருக்கு போராடும் பெண் காட்டு யானைக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரத்தில் முருகன் என்பவரின் விவசாய தோட்டத்தில் பெண் காட்டு யானை ஒன்று படுத்த நிலையில் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில், அரசு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், சிறுமுகை உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன், வனச்சரக அலுவலர் மனோஜ் மற்றும் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது, யானை எழுந்து நிற்க முடியாமல் படுத்திருப்பது தெரியவந்தது.

உடனே மருத்துவ குழுவினர் படுத்திருக்கும் பெண் யானைக்கு ஊட்டச்சத்து மருந்து மாத்திரைகளை அளித்தனர். மேலும், ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் படுத்து இருக்கும் பெண் யானையை எழுந்து நிற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் யானையால் சுயமாக நிற்க முடியவில்லை. இதனையடுத்து, மருத்துவ குழுவினர் யானைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Views: - 1205

0

0