ஆக்ரோஷத்துடன் கூடிய கல்கத்தா காளியம்மன் சிலை.. ஒரே கல்லில் வடித்து திருப்பூர் சிற்பிகள் அபாரம்..!!

Author: Babu Lakshmanan
22 October 2022, 5:01 pm
Quick Share

திருப்பூர் அருகே ஒரே கல்லில் செதுக்கிய 6 டன் எடையுள்ள விஸ்வரூப ஆக்ரோஷத்துடன் கூடிய கல்கத்தா காளியம்மன் சிலை பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளது.

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி கற்களில் சிலைகள் செய்வதில் உலக புகழ்பெற்ற ஊராகும். இங்கு 150க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி சிலைகள் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோயில் களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

god - updatenews360

இலங்கை, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக திருப்பூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊத்துக்குளி மற்றும் காங்கேயம் பகுதிகளில் இந்த சிற்பங்கள் செய்வதற்கான கற்கள் கல்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு, திருமுருகன்பூண்டிக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு சாமி சிலைகள் பிரத்யேகமாக செய்யப்பட்டு வருகிறது.

திருமுருகன்பூண்டியில் இருந்து சிறுபூலுவப்பட்டி செல்லும் ரிங்ரோட்டில் கேது கோவில் அருகே ஸ்ரீ திருமகள் சிற்பக்கலைக் கூடத்தை நடத்தி வருபவர் சிற்பி வீரபத்திரன் ஆசாரி மகன் சிற்பி சிவகுமார் (வயது 42). சிலைகள் செய்வதில் டாக்டர் பட்டம் பெற்ற இவரது தாத்தா சிற்பி ராமசுப்பு ஆசாரி தொடங்கி 30 ஆண்டுகளாக கற்களில் சிற்பங்களை செதுக்கி வருகிறார்கள். தற்போது சிவகுமார் விஸ்வரூப ஆக்ரோஷமான, 10 தலைகள் கொண்ட கல்கத்தா காளியம்மன் சிலையை தத்ரூபமாக செதுக்கியுள்ளார்.

கல்கத்தா காளியம்மன் சிலை வடிவமைத்தது குறித்து சிற்பி சிவகுமார் கூறியதாவது: இந்த காளி சிலையை கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாசன் மாவட்டம், சாந்திராம பகுதியை சேர்ந்த கோவில் நிர்வாகிகள் கல்கத்தா காளி சிலையை ஒரே கல்லில் செய்து தருமாறு கேட்டனர். இதன் அடிப்படையில் ஊத்துக்குளியில் வெட்டி எடுக்கப்படும் கற்கள் மட்டுமே சாமி சிலைகள் செய்வதற்கு ஏற்றது எனபதால், இதற்காக நாங்கள் ஊத்துக்குளி சென்று பார்த்தோம்.

ஆனால், ஊத்துக்குளியில் அனைத்து கல்குவாரிகளும் பல்வேறு பிரச்சினைகளால் மூடப்பட்டுள்ளதால், இதே தரமுள்ள கற்கள் காங்கேயம் அருகே உள்ள தென்னிலையில் கிடைக்கிறது என்ற தகவல் அறிந்து அங்கு சென்றோம். பின்னர், அங்குள்ள ஈஸ்வரன் கல்குவாரியில் இருந்து 15 அடி உயரம் 10 அடி அகலம் மற்றும் 3 அடி கணம் கொண்ட 15 டன் எடையுள்ள கருங்கல்லை லாரி மூலம் இங்கு கொண்டு வந்தோம்.

god - updatenews360

பின்னர் இதற்கான வேலைகளை எனது (சிவகுமார் ) தலைமையில் பூதத்தான், எம்.செல்வம், பொம்மையன், கருப்பன், கணேசன், குமார் மற்றும் எஸ்.செல்வம் ஆகியோர் கொண்ட சிற்பக்குழுவினர் செய்தோம். இந்த காளி சிலையை ஆதார பீடம் மற்றும் கமல பீடத்துடன் 12 அடி உயரம், 7 அடி அகலம் 2 அடி கணத்தில் 6 டன் எடையாக குறைத்தோம். காளி சிலையானது 10 தலைகளை கொண்டது. தலையில் கீரிடம், மூக்குத்தி அணிந்து கோரைப்பல்லுடன், 2 துவாரத்துடன் மூக்கை வெடைத்த நிலையால். விஸ்வரூப ஆக்ரோஷத்துடன் நாக்கை வெளியே நீட்டியபடி காட்சி அளிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கழுத்தில் நெக்லஸ் மற்றும் ஆபரணங்களும், மார்பில் உள்ள முலைக்காம்பை மனித தலையை கொண்டு மறைத்தவாறு மனித கைகளை ஆடையாக இடுப்பில் கட்டியும், இடுப்பில் ஒட்டியானமும், கைகளில் காப்பு கட்டியும், ஞாபி என்னும் தொப்புள் தெரிய காலில் சலங்கையும் உள்ளது.

god - updatenews360

அதேபோல் கழுத்தில் 20 மனித தலைகளை மாலையாக அணிவித்த நிலையில் வலது பக்கம் உள்ள 5 கைகளில் ஏக சூலம், கதை, கதிர் அரிவாள், கத்தி, வில் அம்பும், இடது பக்கம் உள்ள 5 கைகளில் சங்கு, இரத்தக்கிண்ணம், அரக்கன் தலை, சாட்டை, கிலுக்கையும் உள்ளது. மேலும், காளி சிலைக்கு கீழே சிவன் வேடத்தில் வந்த கொடூர அரக்கனை மெட்டி அணிந்த காலால் மிதித்து வதம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 7 மாத அவகாசத்தில் 6 மாதத்தில் சிலையை செய்து முடித்துள்ளோம். அத்துடன் படத்தை பார்த்து தத்ரூபமாக செதுக்கியது எங்களுக்கு பெருமையாக உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, நேற்று காலை முழுமை அடைந்த காளி சிலை பெரும் சிரமத்துடன் பாதுகாப்பாக சிற்பக் கலைக்கூடத்தில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற ( 23ந் தேதி ) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு காளி சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

Views: - 704

0

0