ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு ஊர் கூடி இழுக்கப்பட்ட தேர் : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் கனிமொழி பெருமிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2023, 5:02 pm
Kani Adn Nirmala -Updatenews360
Quick Share

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876-ல் இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. இங்கு தற்போது வரை பல்வேறு கட்டங்களாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

இதில் பண்டைய தமிழர்களின் வாழ்விடம், இடுகாடு ஆகியவை குறித்து தகவல்கள் கிடைத்தது. அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், வெண்கல பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை தேடும் பணியும் திருக்கோளூர், அகரம் போன்ற பகுதியில் நடந்து வருகிறது. இதனால் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் நாகரிகம் உலகிற்கு தெரியவந்தது. இங்கு நடந்த அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்த பணி கடந்த 145 ஆண்டுகளாக தள்ளிப்போய் கொண்டிருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால் 145 வருட கனவு நிறைவடைந்தது.

இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. திருச்சி தொல்லியல்துறை மண்டல இயக்குனர் டாக்டர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் தலைமையில் பணி நடந்து வந்தது. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

கனிமொழி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். மேலும் ஆதிச்சநல்லூர் பரம்பில் பி சைட்டில் ஆன் சைட் எனப்படும் எடுத்த பொருட்களை அந்த குழியில் வைத்து காட்சிப்படுத்தி உள்ளனர்.

மேலும் அதை சுற்றி கண்ணாடி பேழைகள் அமைத்து மேல் இருந்து குழியின் உள்ளே உள்ள பொருட்களை பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் முதன் முறையாக ஆதிச்சநல்லூரில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழாவில் கனிமொழி எம்.பி பேசியதாவது :தமிழ்நாட்டு மக்களின் தொன்மையை, தமிழின் பழைமையை பேசுவது என்றால் இன்று வரை நாம் பேசும் , உயிர்ப்போடு இருக்கும் மொழியான தமிழுக்கு இருக்கும் பெருமைதான். தமிழ் மொழியை லட்சக்கணக்கான மக்கள் பேசுகிறார்கள் அதனால்தான் அதற்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது.

நமது மூதாதையர் வாழ்வியல் எப்படி இருந்தது என்பதை நாம் அகழ்வாய்வு மூலம் கண்டறிய முடியும். 100 ஆண்டுகளுக்கு பின்னர் அகழ்வாய்வுகள் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடந்து வருகிறது.

1905 ல் அலெக்சாண்டரியாவிற்கு பின்னர் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் தான் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. ஈமச்சடங்குகள் செய்யப்பட்ட , மக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அகழ்வாய் செய்யப்பட்ட இடத்திலேயே ஆன்சைட் அருங்காட்சியகம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழ்ந்த இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது . பராக்ரமபாண்டியபுரம் என்ற இடத்தில் நடந்த அகழாய்வில் மிகப்பெரிய மதில் சுவர் கண்டறியப்பட்டுள்ளது. அகழாய்வில் பல அரிய சுவாரஸ்யமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு ஊர் கூடி இழுக்கப்பட்ட தேர். அனைவரும் ஆர்வத்துடன் ஒன்றாக சேர்ந்து மிகப்பெரிய காரியத்தை செய்துள்ளனர்.

ஆதிச்சநல்லூர் பகுதியில் அமையும் அருங்காட்சியகம் உலகில் அனைவரும்
பாராட்டக்கூடிய அருங்காட்சியகமாக அமைய வேண்டும் என கனிமொழி தெரிவித்தார்.

Views: - 412

0

0