பிரபல ரவுடி ராக்கெட் ராஜா பெயரை சொல்லி கொலை மிரட்டல்… திரைப்பட தயாரிப்பாளர் போலீஸில் பரபரப்பு புகார்…!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 2:10 pm
Quick Share

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும் நபரை கைது செய்ய கோரி கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் கோவிந்தன் என்பவர் தனியாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஏற்கனவே, இரண்டு படங்களை தயாரித்து உள்ளார். தற்போது மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பிற்காக சென்னையைச் சேர்ந்த சாகர் என்ற நபரிடமிருந்து சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கேமரா லென்ஸ்களை வாங்கியுள்ளார்.

அதற்குரிய பணத்தை அவர் தந்த போதும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் சென்னையில் வைத்து அடியாட்களுடன் வந்த சாகர் என்ற நபர் படப்பிடிப்பு தளத்தில் ரகளை ஈடுபட்டதுடன், வாங்கிய லென்ஸ்க்கான பணத்தை தரவில்லை எனக் கூறி, 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேமரா லென்ஸ்களை பறித்து சென்றதுடன், திரைப்பட தயாரிப்பு நிறுவன ஊழியரான தமிழ்ச்செல்வன் என்பவரையும் கடத்திச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக ரகளையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படாததை அடுத்து, ஸ்ரீதர் கோவிந்தன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், பல்வேறு வகைகளில் ஸ்ரீதர் கோவிந்தராஜை சாகர் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனுடையே, ஸ்ரீதர் கோவிந்தராஜன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வரும் சூரி என்பவரை நேற்று இரவு செல்போனில் அழைத்த சாகர், தான் பிரபல ரவுடியான ராக்கெட் ராஜாவின் நண்பர்களுடன் அமர்ந்திருப்பதாகவும், ‘நீ எங்கே இருக்கிறாய், உனது லைவ் லொகேஷனை அனுப்பு.. கோவையில் இருக்கிறாயா..? ஸ்ரீதர் கோவிந்தன் எங்கு இருக்கிறார். அவரது முகவரியை கொடு, இல்லையென்றால் நாளை தூக்கி விடுவோம்,” என மிரட்டுவதாக சொல்லப்படுகிறது.

எனவே, சூரி மற்றும் ஸ்ரீதர் கோவிந்தராஜன் ஆகிய இருவரும் தங்களுக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதேபோல், சென்னையை சேர்ந்த சின்னா சங்கர் என்பவரும் சாகர் உடன் இணைந்து, தனது நிறுவனத்தின் பெயரை தவறுதலாக பயன்படுத்தி வருவதாகவும், சின்னா சங்கர் மீது பைசர் கிரைமில் புகார் அளித்திருப்பதாகவும் கூறிய ஸ்ரீதர் கோவிந்தன், உயிருக்கு பயந்து 6 முதல் 7 மாதங்களாக தான் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், வருகிற 28ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதால் தன்னை சுற்றி உள்ள நபர்களை சாகர் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்றும் கூறினார்.

மேலும், சின்னா சங்கர் மீது ஏற்கனவே ஆள் கடத்தல் வழக்கு உள்ளதாகவும், எனவே சாகர் மற்றும் சின்னா சங்கர் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 354

0

0