பிரபல ஹோட்டல் உணவில் கிடந்த கரப்பான் பூச்சி… வாடிக்கையாளர் அதிர்ச்சி ; கோவையில் மற்றுமொரு சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
27 November 2023, 2:04 pm
Quick Share

கோவையில் பிரபல ஹோட்டல் உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமாக இயங்கக்கூடிய தனியார் நிறுவனமான டைகர் எண்டர்பிரைஸ். மாத கடைசி ஞாயிற்றுக் கிழமையில் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு உணவு வழங்குவது வழக்கம். நேற்று கார்த்திகை தீபம் என்பதால் காந்திபுரம் பகுதியில் இருக்கக்கூடிய அடையாறு ஆனந்த பவன் உணவகத்தில் பார்சல் வாங்கி சென்றுள்ளனர்.

உணவைப் பிரித்து உண்ணும் போது அதில் கரப்பான் பூச்சி ஒன்று கீரை கூட்டில் இருப்பதைக் கண்டு பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, அடையார் ஆனந்த பவன் உணவகத்திற்கு சென்ற நிறுவன ஊழியர் கிரிஸ்டோபர், இதுகுறித்து கேட்ட பொழுது முறையாக பதில் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் அழைத்து தகவல் தெரிவித்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும், அலட்சியமாகவும் பதில் அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

2157 ரூபாய்க்கு உணவை வாங்கி சென்ற நிலையில், கரப்பான் பூச்சி உடன் இருந்த உணவை சாப்பிட்ட பெண்கள் இருவரும் வாந்தி எடுத்துள்ளனர். இந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக கோவையில் உள்ள பிரபல உணவகங்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது வாடிக்கையாகி விட்டதாகவும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டன்ர்.

Views: - 444

0

0