கோவையை உலுக்கிய ஆசிட் வீச்சு சம்பவம்.. ஒரு மாதத்திற்கு பின்பு நடந்த சோகம் ; அதிர்ச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம்..!!

Author: Babu Lakshmanan
29 April 2023, 12:24 pm
Quick Share

கோவை நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கவிதா மீது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா, தன் மீது உள்ள வழக்கு குறித்த விசாரணைக்காக முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

அப்போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரது கணவர் சிவா ஆசிட் ஊற்றினார். மனைவி மீது ஆசிட் ஊற்றிய சிவாவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீசார் அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.

80 சதவீதம் உடல் வெந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கவிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு கவிதா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பின்னர் கவிதாவின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட இருக்கின்றது. ஆசிட் வீச்சில் காயம் அடைந்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 284

0

0