அரசு பேருந்தை‌ வழிமறித்த காட்டுயானை கூட்டம்… ஆக்ரோஷமாக பேருந்தை தாக்க வந்த ஒற்றை காட்டு யானை ; பீதியடைந்த பயணிகள்…!!

Author: Babu Lakshmanan
29 November 2023, 2:43 pm
Quick Share

கோவை ;மேட்டுப்பாளையம் அருகே முள்ளி மஞ்சூர் சாலையில் அரசு பேருந்தை‌ ஆக்ரோஷமாக தாக்க வந்த ஒற்றை காட்டு யானையால் பயணிகள் பீதியடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் இருந்து வெள்ளியங்காடு வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல மூன்றாவது வழித்தடமாக முள்ளி – மஞ்சூர் சாலை உள்ளது. இந்த சாலையானது அடர்ந்த வனப்பகுதி நடுவே அமைந்துள்ள நிலையில் யானை, கரடி, மான், சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இந்த சாலை பகுதியில் நடமாட்டம் அதிகம் உள்ளது.

அதே சமயத்தில் இவ்வழியாக அரசு பேருந்தும் மஞ்சூர் வரை இயக்கப்படுகிறது. இந்த நிலையில் குட்டியுடன் வந்த யானை கூட்டம் ஒன்று முள்ளி மஞ்சூர் சாலை வனப்பகுதியில் நடமாடி வருகிறது. அவைகள் அவ்வப்போது சாலையில் உலா வரும் நிலையில் இன்று காலை சாலையின் ஓரத்தில் அந்த யானை கூட்டம் உலா வந்துள்ளது.

பின்னர், சாலையின் நடுவே ஒரு யானை நின்ற அந்த வழியாக வந்த அரசு பேருந்தினை வழிமறித்தது. பின்னர் பேருந்தினை ஓட்டுநர் முன்னோக்கி செலுத்த முயன்ற போது அந்த யானை கோபமடைந்து ஆக்ரோசமாக பேருந்தை நோக்கி துரத்தி வந்தததால் சுதாரித்த ஓட்டுநர் வேகமாக பின் நோக்கி இயக்கிய நிலையில் அந்த யானை திரும்பி சென்றது சுமார் அரை மணி நேரம் மீண்டும் சாலையில் நடந்து சென்று பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. அரசு பேருந்தில் பயணித்த பயணிகள் யானை கூட்டத்தை ஆச்சரியத்துடன் கண்டு வீடியோ எடுத்தனர்.

இந்த வனச்சாலையில் யானைகள் தொடர்ந்து சாலையில் உலா வரும் என்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 259

0

0