கோவையில் சிக்னலில் பட்டாகத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் : அலறிய வாகன ஓட்டிகள் : வைரலான வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2024, 1:57 pm
Cb
Quick Share

கோவையில் சிக்னலில் பட்டாகத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் : அலறிய வாகன ஓட்டிகள் : வைரலான வீடியோ!!

கோவை – பொள்ளாச்சி சாலையில், ஈச்சனாரியை அடுத்துள்ள எல் அன்ட் டி நால்ரோடு சிக்னல் சந்திப்பு அருகே, தனியார் உயர்கல்வி நிறுவனம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட நால்ரோடு சந்திப்புப் பகுதியில் வாகனங்கள் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தன.

ஒருபுறம் வாகனங்கள் செல்ல, மற்ற மூன்று வழித்தடங்களில் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அபபோது பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில், சிக்னலுக்காக வாகன ஓட்டிகள் காத்திருந்தனர்.

அந்த சமயத்தில் இரண்டு இளைஞர்கள் கையில் பட்டாக் கத்திகளுடன் இருசக்கர வாகனத்தில், சிக்னல் சந்திப்பில் வட்டமடித்தபடி கூச்சலிட்டவாறும், வாகன ஓட்டிகளை மிரட்டியவாறும் சுற்றினர். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சிலர் அவர்களின் செயலை வீடியோ எடுத்தனர்.

சிலர் மதுக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீஸார் வருவதற்குள் அவர்கள் தப்பிச் சென்றனர். வீடியோ காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்தனர்.

அதில் கையில் பட்டாக் கத்திகளை வைத்து மக்களை அச்சுறுத்தியபடி சுற்றியவர்கள், தனியார் கல்வி நிறுவனத்தில் பி.காம் சிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவர்கள் எனத் தெரிந்தது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் கோவையில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருவதும், கல்லூரி ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது, அதையொட்டி பொதுவெளியில் அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் சுற்றியதும் தெரிந்தது.

இதையடுத்து ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல், தகாத வார்த்தையில் பேசுதல், ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து அதில் 17 வயதான ஒரு மாணவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Views: - 120

0

0