பணி செய்யாமல் அலுவலகத்தில் ஓபி அடிக்கும் தூய்மை பணியாளர்கள் ; சுகாதார ஆய்வாளர் மீது ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு..!!

Author: Babu Lakshmanan
13 December 2022, 10:04 pm
Quick Share

கோவை ; தூய்மைப்பணி செய்யாமல், அலுவலகப்பணிகள் செய்பவர் மீதும், ஓய்வுபெற்று அலுவலகபணிகளில் ஈடுபடுவோர்கள் மற்றும் குப்பை தேங்குவதை ஊக்குவிக்கும் சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சமூக நீதிக்கட்சியின் சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் 2000க்கும் மேற்பட்ட நிரந்தரம் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் 325 தூய்மைப்பணியாளர்கள் பணிக்கு சேர்ந்தனர். இதில் பட்டியல் இனத்தவரை தவிர மற்ற யாரும் தூய்மைப்பணிக்கு வருவதில்லை. வார்டுகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது.

சுகாதார ஆய்வாளர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு, தூய்மைப்பணி செய்யாமல், மாற்று பணிக்கு அனுப்புகின்றனர். இதனால், பல வார்டுகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் பணிகள் பாதிக்கப்படுகிறது. மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் மீண்டும் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அதிகாரிகளின் உதவியாளராக அவர்கள் பணிபுரிவதாக குற்றம் சாட்டினர்.

கோவை மாநகராட்சியிலுள்ள பெரும்பாலான வார்டுகளில், வார்டுக்கு 5 பேர் வீதம் தூய்மைப்பணியாளர்கள் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை மீண்டும் தூய்மைப்பணி செய்து மாநகரத்தில் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.

ஒய்வுபெற்ற மாநகராட்சியில் பணியாற்றும் 325 பணியாளர்களில் தூய்மை பணி செய்யாமல் அலுவலகத்தில் அலுவலகப் பணி மட்டுமே செய்து வருவதை ஆவணங்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மத்திய மண்டல தலைவர் மீனா லோகு அவர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்யாமல் டீ குடித்துவிட்டு சாலையில் அமர்ந்து வேலை செய்வதில்லை என்று போகிற போக்கில் தூய்மை பணியாளர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியில் நியமனம் செய்யப்பட்ட கடந்த அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் இன்று வரை தூய்மைப்பணி செய்யாமலும், ஓய்வு பெற்ற தூய்மைப்பணியாளர்கள், ஓய்வு பெற்ற பிறகு ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருவதாலும், ஒவ்வொரு வார்டிலும் தூய்மை பணியாளர் அலுவலகத்திலும் ஐந்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருவதால் 500க்கும் மேற்பட்டோர் பணி செய்யாமல் இருந்து வருவதற்கான ஆவணங்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் உறவினர்கள் பல பேர் 325 பணியாளர்களில் பணி நியமனம் பெற்று இன்று வரை அலுவலகத்தில் மட்டுமே பணி செய்து வருவதாக ஆதாரபூர்வமாக ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 538

0

0