இந்த முறை தப்பாது… நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியிருக்கும் ; மீண்டும் ம.நீ.ம.வில் இணைந்த அருணாசலம் நம்பிக்கை!!

Author: Babu Lakshmanan
13 December 2022, 9:30 pm
Quick Share

கோவை ; நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் மிகப்பெரிய எழுச்சி பெறும் என பா.ஜ.க.,வில் இருந்து விலகி, மீண்டும் ம.நீ.ம.வில் இணைந்த மூத்த நிர்வாகி அருணாசலம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.,வில் இணைந்தார். இதனிடையே அவர் மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசனை சந்தித்து மீண்டு கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், கோவை டவுன்ஹால் அருகே உள்ள தனியார் ஹாலில், மீண்டும் புதிதாக இணைந்த அருணாச்சலம் தனது தாய் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் தங்கவேலு, மாநில செயலாளர்கள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம், அனுஷா ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் அருணாச்சலம் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- இரண்டு வருட வன வாசத்திற்கு பிறகு தாய்க்கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு தாயுள்ளத்தோடு, நம்மவர் என்னை அரவணைத்து ஏற்றுக் கொண்டார். தொண்டர்கள் அனைவரும் தாயுள்ளத்தோடு வரவேற்பு கொடுத்தனர். கடைக்கோடி தொண்டர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி கூற முதற்பயணமாக கோவை வந்துள்ளேன்.

உடனடியாக களத்திற்கு சென்று தொண்டர்களின் கருத்தை கேட்டு அதனை தன்னிடம் கூறுமாறு நம்மவர் என்னிடம் தெரிவித்தார். அனைத்து மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், இங்குள்ளவர்கள் தேர்தலில் உழைத்தமைக்கு நன்றி செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாடாளுமன்ற தேர்தலில் ம.நீ.ம. அமோக வெற்றி பெற்று, மிகப்பெரிய எழுச்சி பெறும்.அதற்கு இது முதல் துவக்கமாக இருக்கும், என தெரிவித்தார்.

Views: - 316

0

0