7 ஆண்டாக நடக்காத திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை நடத்துங்க.. தவறினால் தேர்தலை புறக்கணிப்போம்…!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2024, 1:36 pm
temple
Quick Share

7 ஆண்டாக நடக்காத திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை நடத்துங்க.. தவறினால் தேர்தலை புறக்கணிப்போம்…!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலுக்கு அப்பகுதியை சேர்ந்த அனைத்து பொதுமக்கள் சார்பில் 10 நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இக்கோயில் திருவிழாவை நடத்துவது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு அதிகாரிகள் மேற்கொண்டு இரு தரவிருக்கும் எவ்வித பிரச்சனையும் உண்டாகாமல் இருக்க கோயில் திருவிழாவை நடத்தாமல் நிறுத்திவிட்டனர்.

இதனால் கடந்த 7 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் சார்பில் எங்கள் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு திருவிழா நடத்துவதை அரசு அதிகாரிகள் சட்ட விதிகளை பயன்படுத்தி தடுக்கின்றனர்.

இதுபோல் அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் கோயிலுக்கு வழக்கம்போல் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

மேலும் அரசு சார்பில் எங்களுக்கு வழங்கிய குடும்ப அட்டை ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் திரும்ப அரசிடமே ஒப்படைப்போம் என கோயில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்துள்ளனர்.

Views: - 218

0

0