பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம்… திருப்பூரில் பாஜக கூட்டத்தை நடத்துவதே இதுக்காகத் தான் ; ஆனந்த் சீனிவாசன்

Author: Babu Lakshmanan
27 February 2024, 11:20 am
Quick Share

காங்கிரஸில் மட்டும் வாரிசுகள் இருக்கிறது என்று கூற முடியாது என்றும், 40க்கும் மேல் வாரிசுகள் பாஜகவிலும் பதவியில் இருக்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து சென்னை திரும்பிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக நியமனம் செய்யப்பட்ட பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டது எனக்கே ஒரு இன்ப அதிர்ச்சியாக தான் இருக்கிறது. திமுக தலைமையில் இருக்கும் எங்களது கூட்டணி 40க்கு 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இந்தியாவைச் சார்ந்த ஊடகங்கள் பல ஊழல்களை மறைக்கிறது. இப்பொழுது புதிதாக ஒரு தகவல் வந்துள்ளது. வருமானவரித்துறை ஆய்வுகளை வைத்து பல தொழிலதிபர்கள் இடமிருந்து கோடி கணக்கில் நன்கொடையை பாஜக பெற்றுள்ளது. மிக விரைவில் அதற்கான பட்டியல் வெளிவரும்.

ஊழலே வாழ்ந்ததில்லை, ஊழலை செய்யவில்லை என கூறிய பாஜக எவ்வளவு வாங்கியுள்ளது என்பதை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வோம். தமிழ்நாட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்கிறோம். அந்த வகையில், மோடியையும் நாங்கள் வரவேற்கிறோம். திருப்பூரில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. திருப்பூரில் நீண்ட நாட்களாக இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதாக கூறிக் கொண்டிருக்கிறார்.

இதுவரையில் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை போல் காலதாமதம் பண்ணாமல் கட்டுவாரா என எதிர்பார்ப்போம். திருப்பூரில் பாஜகவிற்கு ஆதரவு இருக்கிறது என்ற பெயரில் இதை செய்கிறார்கள்.

கோடிக்கணக்கில் குதிரை பேரம் செய்து ஆட்சி செய்கிறது. மக்களுக்கும், தொழில் துறைக்கும் ஏதாவது நல்லது செய்தால் நன்றாக இருக்கும். காங்கிரசுக்கும், திமுகவிற்குமான கூட்டணியில் எந்த இழுபறியிலும் இல்லை. திமுகவின் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி இருக்கும்.

2004இல் 40க்கு 40 வெற்றி பெற்றது போல் இந்த முறையும் திமுக தலைமையிலான கூட்டணி அப்படியே அமையும். திமுக தலைவர் ஸ்டாலினை பார்க்க உள்ளேன். பாஜகவின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபடுகிறார்கள். அதனால் காங்கிரஸில் மட்டும் வாரிசுகள் இருக்கிறது என்று கூற முடியாது. 40க்கும் மேல் வாரிசுகள் பாஜகவிலும் பதவியில் இருக்கிறார்கள், என்றார்.

பிரதமர் தமிழகம் வர இருக்கும் நிலையில், கருப்புக் கொடி காட்டுவோம் எனக் கூறிய காங்கிரசை சார்ந்த நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என கேட்டபோது, தமிழகம் மீனவர்களுக்கு தொடர்ந்து பிரச்சனை உள்ளது இலங்கையில் கைது செய்யப்படுகிறார்கள் இதனால் பிரதமர் வரும்போது கண்டிப்பாக கருப்புக்கொடி காட்டுவோம், எனக் கூறினார்.

Views: - 93

0

0