தமிழ் இனத்தையே தீவிரவாதிகளைப் போல சித்தரிப்பதா..? மன்னிப்பு கேட்டே ஆகனும் ; கொந்தளிக்கும் எம்பி ஜோதிமணி…!!

Author: Babu Lakshmanan
19 March 2024, 9:06 pm
Quick Share

பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தை தொடர்புபடுத்தி பேசியதற்காக மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையில், 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிப்பதற்கான முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் பயங்கரவாத பயிற்சி பெற்று வந்த நபரே, பெங்களூரூவில் உள்ள கஃபேவில் குண்டு வைத்ததாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு கண்டனம் தெரிவித்து X தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது :- பாஜக ஒன்றிய அமைச்சர் ஷோபா தமிழ்நாட்டில் பயிற்சியளிக்கப்பட்டு, தமிழர்கள் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று பேசியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.

ஒரு பொறுப்புள்ள ஒன்றிய அமைச்சர் தமிழ் இனத்தையே தீவிரவாதிகளைப் போல சித்தரிப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாஜக தமிழர்களை அவமதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. தமிழினத்திற்கு எதிராக தொடர்ந்து வன்மத்தோடு செயல்படுகிறது. தமிழ் மக்கள் தொடர்ந்து பாஜகவின் தமிழர் விரோத போக்கிற்கு பாடம் புகட்டியிருக்கிறார்கள். இனிமேலும் பாடம் புகட்டுவார்கள். உடனடியாக ஷோபா அவர்கள் மன்னிப்புக் கேடக வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 124

0

0