அடித்து சொல்லுவேன்… மீண்டும் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் : காங்., எம்பி கார்த்திக் சிதம்பரம் நம்பிக்கை!!

Author: Babu Lakshmanan
17 February 2024, 5:01 pm
Quick Share

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பே கிடையாது என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கு செய்தியாளர்களை அவர் சந்தித்த போது, தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது :- இனிமேல் வாங்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லவில்லை. 90 சதவீத பணம் பாஜகவிற்கு சென்று சேர்ந்துவிட்டது. அவர்கள் வேண்டிய பணத்தை பெற்றுக் கொண்டார்கள். இனிமேல் வாங்க வேண்டாம், வாங்கி இருந்தால் பட்டியலை கொடுக்க சொல்லி இருக்கிறார்கள் தவிர. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க சொல்லியுள்ளார்களே தவிர இது பாஜகவிற்கு எந்த பாதிப்பும் வராது. மற்ற எந்த கட்சிக்கும் இந்த அளவிற்கு நிதி வரவில்லை. இது வரவேற்கக் கூடிய தீர்ப்பு தான். ஆனால் இதில் உண்மையான தாக்கம் இருக்குமேயானால், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி வங்கி கணக்கு முடக்கம் குறித்த கேள்விக்கு:- இது பழிவாங்கும் செயல்தான். 45 நாட்களுக்கு தாமதமாக பைல் செய்ததற்காக 14 லட்சம் ரொக்கமாக டொனேஷன் பெற்றதற்காக, 110 கோடி ரூபாயை சேர்ப்போம் என்று கூறுவது பழிவாங்கும் செயல் தேர்தலுக்கு முன்பாக வாடிக்கையாக அரசியல் கட்சியை முடக்குவதற்காக எடுக்கப்படுகிற நிகழ்வாக பார்க்கிறேன்.

மீண்டும் சிவகங்கையில் போட்டியிடக் கூடாது என சுதர்சன் நாச்சியப்பன் முயற்சி குறித்த கேள்விக்கு:- அரசியல் கட்சியில் சீட்டு கேட்பது அவர் அவர்களின் உரிமை. கடந்த முறையும் அவர் சீட்டு கேட்டார், இந்த முறையும் கேட்டுள்ளார். ஆனால், அதை முடிவெடுக்க வேண்டியது மத்திய தேர்தல் கமிட்டி தான். தொகுதி யாருக்கு என்பதை கூட்டணி கட்சி தலைமை முடிவெடுக்கும். அதன் பிறகு தான் வேட்பாளர் முடிவு செய்யப்படும். தொகுதியில் தானும் நிற்க வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவார்கள். இது புதிதான நிகழ்வாக நான் பார்க்கவில்லை. ஒரு சீட்டுக்கு பலர் விரும்புவது அந்த கட்சியின் உயிரோட்டத்தை காட்டுகிறது, எனக் கூறினார்.

தமிழகத்தில் எத்தனை இடத்தில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு:- திமுக தான் கூட்டணிக்கு தலைமை. அவர்கள்தான் பங்கிட்டு கொடுப்பார்கள். புதிதாக கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு அனைவருக்கும் தொகுதி பகிர்ந்து அளிக்கப்படும். அனைத்துக் கட்சிகளும் நிறைய இடங்களை கேட்பார்கள், ஆனால் இறுதியில் 39 தொகுதிகளுக்குத்தான் கொடுக்க முடியும், என்றார்.

இண்டியா கூட்டணி உடைந்து சிதறுவது குறித்த கேள்விக்கு:- ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் இலக்கணம் உள்ளது. அதை பொறுத்து அரசியல் இலக்கணம் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்த அளவில் இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. என்னுடைய பார்வை, சிந்தனை தமிழ்நாடு தான். அடித்து சொல்கிறேன், மீண்டும் 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும், எனக் கூறினார்.

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறித்த கேள்விக்கு:- தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பே கிடையாது, என்றார்.

மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு:- அவர்களின் உரிமை அவர்கள் அதை செய்கிறார்கள். எங்களின் எதிர்ப்பை தெரிவிப்போம். உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம், தமிழ்நாட்டின் நிலையை அனைத்து கட்சியும் ஒரு மனதாக, ஒற்றுமையாக இருக்கிறோம், எனக் கூறினார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு:- பொதுமக்கள் அனைவருமே மத்திய அரசிற்கு எதிராக தான் இருக்கிறார்கள். விலைவாசி உயர்ந்துள்ளது, விவசாயிகளுக்கு கொள்முதல் குறைந்துவிட்டது. தமிழகத்தில் பாஜகவின் மீது எப்படி கோபம் உள்ளதோ அதைப்போல மற்ற மாநிலங்களிலும் பாஜகவின் மீதான கோபத்தை வெளியில் கொண்டு வந்தால் கூட்டணிக்கு நல்லது, என்றார்.

Views: - 489

0

0