தொடர் விடுமுறையால் அலைமோதும் கூட்டம்… நிரம்பி வழியும் பேருந்துகள்.. கைக்குழந்தைகளுடன் பலமணி நேரம் காத்து கிடக்கும் பெண்கள்..!!

Author: Babu Lakshmanan
21 October 2023, 12:14 pm
Quick Share

தொடர் 4 நாள் விடுமுறை தினங்களில் போதிய பேருந்துகள் இயக்காததால் கரூர் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் கைக்குழந்தைகளுடன் பெண்கள் காத்துக்கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய பகுதியாக கருதப்படும் கரூர் மாவட்டம். இந்த கரூர் பேருந்து நிலையமானது, திருச்சி, கோவை, சேலம், மதுரை, தேனி ஆகிய மார்க்கங்களில் செல்லும் பிரதான பேருந்து நிலையமாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், கரூர் தொழில் மிகுந்த நகரமாக இருந்து வருகிறது. இங்கு ஜவுளி, பஸ்பாடி, கொசுவலை உற்பத்தி, கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மிகவும் பரபரப்பாக இருக்கும் கரூர் பேருந்து நிலையம், வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலை மோதியது.

போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சனி, ஞாயிறு, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் 4 நாள்கள் தொடர் விடுமுறை தினங்களால், சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்கின்றனர். இந்த சூழலில் போதிய பேருந்துகளை இயக்காததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்

வழக்கம்போல் வரும் பேருந்துகளும் மாற்று பாதையில் சிறப்பு பேருந்துகளாக அறிவிக்கப்பட்டு சென்னை உள்ளிட்ட பல பகுதியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்பகுதியில் வழக்கம் போல் வரும் பேருந்துகளும் குறைவாக காணப்படுகின்றது. இதனால், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என பல மணி நேரம் காத்திருந்து பேருந்தில் ஏறி தங்களது சொந்த ஊருக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் சென்ற பேருந்துகள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல், திருச்சி, கோவை மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று பயணவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 229

0

0