தொடர் கோடை மழையால் செடியிலேயே அழுகிப் போன மல்லிகை பூக்கள்… மனம் வாடிய விவசாயிகள்!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 6:05 pm
Quick Share

தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் கோடை மழையால் அறுவடைக்கு வரும் தருவாயில் செடியிலேயே அழுகும் மல்லிகை பூக்களால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மல்லி, முல்லை, சாமந்தி, பட்டன் ரோஸ், அரளி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அதிகமாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்கள் தருமபுரி சந்தையில் இருந்து பெங்களுரு, சென்னை, ஈரோடு, மற்றும் ஒசூர் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் மல்லிகைப்பூ விளைச்சல் குறைவாக இருந்ததால் விலை உயர்ந்து ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மல்லிகை பூ விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் மல்லிகைப்பூ விலை குறைந்து கிலோ 300 வரை விற்பனையாகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் கோடை மழை அவ்வப்போது பெய்து வந்தது. தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கனமழையாக பெய்து வந்தது. இதனால் தருமபுரி, செட்டிக்கரை, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிபடடி பகுதிகளில் மல்லிகைப்பூ அறுவடைக்கு தயாரான தருவாயில் செடியிலேயே அழுகி வருகிறது.

மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், மல்லிகை பூ செடியில் ஒருவித நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நோயிலிருந்து பாதுகாக்க மருந்து அடிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டததில் மல்லிகை பூ விலை அதிகரித்த போது, விளைச்சல் இல்லை. தற்பொழுது விளைச்சல் அதிகமாக இருக்கும் நேரத்தில் மழையால் பூக்கள் அழுகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Views: - 915

0

0