‘ஆஞ்சநேயா என்ன ஜெயிக்க வச்சிருப்பா..?’ நான் உங்க வீட்டு பொண்ணு… சாமி கும்பிட்டு பிரச்சாரம் செய்த சௌமியா அன்புமணி!!!

Author: Babu Lakshmanan
29 March 2024, 3:35 pm
Quick Share

ஆஞ்சிநேயா என்ன ஜெயிக்க வச்சிருப்பா என வேண்டி கொண்டு நான் உங்க வீட்டு பொண்ணு, உங்கள நம்பி தான் வந்து இருக்கேன் என தர்மபுரி வேட்பாளர் செளமியா அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடப்பட்டி பகுதியில் இன்று பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது, அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை செய்த அவர், ‘ஆஞ்சநேயா என்னை எப்படியாவது ஜெயிக்க வச்சிருப்பா’ என மனம் உருகி வேண்டி கொண்டு கோயிலை சுத்தி வந்து சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், அவர் பொதுமக்களுக்கு பிரசாதத்தை வழங்கி விட்டு, “நான் உங்க வீட்டு பொண்ணு, உங்கள நம்பி தான் வந்து இருக்கேன். என்ன ஜெயிக்க வச்சுருங்க,” என பேசினார்.

திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது ;- அரூர் பகுதி பின்தங்கி உள்ளது. இந்த பகுதியை வளர்ச்சி அடைய பாடுபடுவேன். அரூர் பகுதி மக்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். அதை தடுக்கும் வகையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இங்கு எங்கு திரும்பினாலும் கடும் வறட்சியாக உள்ளது.

இதை மாற்ற தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். இங்கு தொழிற்பேட்டை அமைப்பேன். உங்களின் அன்பும், ஆதரவும் எப்போதும் எனக்கு வேணும். நான் உங்க வீட்டு பொண்ணு, உங்களை நம்பி தான் நான் வந்து இருக்கேன். உங்க ஓட்டு மட்டும் இல்ல, உங்க அன்பையும், உங்க பகுதியில உங்க பசங்களுக்கு நல்ல கல்வி, நல்ல குடிநீர் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கனும்ன்னா எனக்கு மாம்பழ சின்னத்துல ஓட்டு போடுங்க. என்ன ஜெயிக்க வைங்க, இது எல்லாத்தையும் நான் டெல்லிக்கு போய் பேசி உங்களுக்கு எல்லாத்தையும் செய்றேன், என பேசினார்.

இதில் பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே மணி, வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் அரசாங்கம், அல்லிமுத்து திருவேங்கடம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் கூட்டணி அமமுக டி.கே.ராஜந்திரன் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன், பாஜக முன்னாள் எம்எல்ஏ ஏ.பாஸ்கர் பிரவின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 153

0

0