திமுக மாமன்ற உறுப்பினர் அடாவடி… விஷம் குடித்து ஒருவர் தற்கொலை முயற்சி… கண்ணீர் மல்க மனைவி விடுத்த கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
7 March 2024, 8:30 am
Quick Share

திண்டுக்கல்லில் திமுக மாமன்ற உறுப்பினரின் அடாவடியால் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் 24 வார்டு பகுதியை சேர்ந்தது ஜான் பிள்ளை சந்து. இந்தப் பகுதியை சேர்ந்தவர் கோபால கண்ணன் (38). இவர் தங்க நகைகளுக்கு பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி அமலா தேவி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த பகுதியில் திமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். செந்தில்குமாரும், கோபால கண்ணனும் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கோபாலக்கண்ணன் செந்தில்குமாரிடம் ரூபாய் 4 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதற்கு மாதமாதம் வட்டி பணமும் கொடுத்து வந்துள்ளார். ரூபாய் 1.5 லட்சம் அசல் பணத்தை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கொடுத்துள்ளார். இந்நிலையில், மீதமுள்ள தொகைக்கு கடந்த சில மாதங்களாக வட்டி பணம் இவரால் செலுத்த முடியவில்லை.

வட்டியோடு சேர்த்து தற்போது வரை ரூபாய் 5 லட்சம் நிலுவையில் உள்ளதாக செந்தில்குமார் கோபால் கண்ணிடம் கூறியுள்ளார். உடனடியாக எனக்கு ஐந்து லட்சம் பணம் வேண்டும் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், தனக்கு சொந்தமான வீட்டை விற்று தங்கள் கடனை அடைத்து விடுவதாக கூறியுள்ளார். செந்தில்குமார் அந்த வீட்டை தானே வாங்கிக் கொள்வதாகவும், அந்த வீட்டில் கோபால கண்ணனின் சகோதரிகளுக்கும் பங்கு உள்ளதால் சகோதரிகளுக்கு சேர வேண்டிய ரூபாய் 8 லட்சத்தை மட்டும் முதலில் செந்தில்குமார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று பத்திரம் பதிவு உள்ள நிலையில் கோபால கண்ணன் மீதம் தொகையை தன்னிடம் கொடுத்தால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து கையெழுத்து போடுகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் முதலில் பத்திரப்பதிவு முடிஞ்சவுடன் தருகிறேன் என கூறி உள்ளார்.

செந்தில்குமார் தன்னை ஏமாற்றி விடுவார் என்று இன்று காலையில் தங்க நகை பாலிஷ் போடும் ஆசிட்டை கொடுத்து கோபாலக்கண்ணன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து கோபால கண்ணனின் மனைவி கூறுகையில் கடந்த நான்கு வருடங்களாகவே கவுன்சிலர் செந்தில்குமார் தனது கணவரை தொடர்ந்து வட்டி பணம் அசல் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும், தங்களுக்கு சொந்தமான வீட்டை விற்று அந்த கடனை அடைத்து விடுவேன் என்று கூறியும், அந்த வீட்டை வேறு யாருக்கும் விற்க விடாமல் அடாவடி தனமும் பண்ணியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனது கணவர் பணம் கேட்டு சென்றதற்கு பணம் அசலுக்கும், வட்டிக்கும் சரியாக போய்விட்டது, முதலில் வந்து கையெழுத்தை போடுங்கள் என மிரட்டியதால், தனது கணவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். எனவே, மாமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Views: - 124

0

0